காலை 6 மணிக்கு வரவேண்டிய ஆவின் பால்.. மதிய உணவு நேரத்திற்கு விநியோகம்.. சென்னை மக்கள் 2 நாளாக அவதி
சென்னை: சென்னையில் கடந்த இரு தினங்களாக ஆவின் பால் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் அளவு குறைந்தது.
இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்ந்ததால் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் பால் விற்க முன்வருவார்கள். இதனால் ஆவின் நிறுவனம் நலிவடைய வாய்ப்புள்ளது என்றும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

சோழிங்கநல்லூர்
இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த இரு தினங்களாக பால் சப்ளை செய்வது தாமதமானது. அது போல் முகப்பேர், அம்பத்தூர் பகுதிகளிலும் பால் விநியோகம் தாமதமானது. தினமும் சுமார் காலை 6 மணிக்கு விநியோகம் செய்யப்படும் பால், பகல் 12 மணிக்குத்தான் வீடுகளுக்கு கொண்டு வரப்பட்டன.

காபி டீ குடிக்க முடியவில்லை
காலையில் காபி, டீ குடிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து பால் விநியோகம் செய்தவர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து குறைந்ததன் காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பால் பண்ணையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய பால் வேன்கள் காலதாமதமாக சென்றதால் ஆவின் அட்டைதாரர்கள் சிரமமடைந்தனர்.

சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணையில் பாலை பாக்கெட் செய்ய போதுமான இயந்திரங்கள் இல்லை. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அது போல் கடந்த சில தினங்களாக பால் பாக்கெட்டில் பால் பாக்கெட் நாள் என்ற இடத்தில் அடுத்த நாளுக்கான தேதி இருந்தது.

தேதியிலும் மாற்றம்
பொதுவாக தினமும் விநியோகிக்கப்படும் பாலில் அன்றைய தேதியே இருக்கும். ஆனால் நேற்று மார்ச் 30 ஆம் தேதி விநியோகம் செய்யப்பட்ட பாலில் மார்ச் 31 என இருந்தது. இதுவும் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தின. அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதம் காரணமாக இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications