தமிழகத்தில் உயருகிறது பால் விலை? ஆவின் பால் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்
Recommended Video
சென்னை: ஆவின் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேலூர் தேர்தல் முடிந்தபின்னர் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடைசியாக 2014ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆவின் பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாடுகள் பராமரிப்புக்கு அதிக செலவு ஆவது மற்றும் தீவனங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

தீவினங்கள் விலை
இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் ஜி.ராஜேந்திரன் கூறும் போது "மாடுகளின் பராமரிப்பு செலவு கடுமையாக அதிகரித்துள்ளது, ரூ.40 ஆயிரத்துக்கு குறைவாக மாடுகளை வாங்கமுடிவதில்லை. வைக்கோல் போன்ற மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளது.

ரூ. 42 ஆக உயர்த்தணும்
ஆனால் அதேநேரம் பால் உற்பத்தி விலையானது கடந்த 5 வருடத்தில் 63 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே பசு மாட்டின் பாலின் விலையை லிட்டர் ரூ.27ல் இருந்து ரூ.42ஆக உயர்த்த வேண்டும். அதே போல் எருமை பாலின் விலையை லிட்டர் ரூ.29ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்த வேண்டும்" என்றார்.

அமைச்சரும் ஒப்புதல்
இந்நிலையில் அண்மையில் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்றார். இதன்பின்னர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்தபேட்டி ஒன்றில், பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

பால் விலை உயரும்
இந்நியில் வேலூர் தேர்தல் முடிந்த பின்னர் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலின் விற்பனை விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார்களும் பால் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications