“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம்
சென்னை: "பாஜக வழங்குவதாக கூறிய ஒரு தொகுதியை வேண்டாம் என கூறிவிட்டேன். நாங்கள் கேட்ட தொகுதியை பாஜக கொடுக்காததால் நானே தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன்" என புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக அங்கம் வகிக்கும் என்.டி.ஏ கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார். அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்களில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்தார். சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
புதிய நீதிக்கட்சிக்கு பாஜக சார்பில் எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது பாஜக தலைமை. பாஜக தங்களுக்கு ஒரு சீட் வழங்கும் என்றும், அதில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் ஏ.சி.சண்முகம் கூறிவந்த நிலையில் பாஜக இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் புதிய நீதிக் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து புதிய நீதிக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "பாஜக எங்களுக்கு மிகவும் சவாலான ஒரு தொகுதியை ஒதுக்கினார்கள். அதனால் நானே அந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன்.
பாஜக போட்டியிடுவதற்காக நான் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறேன். பாஜகவில் நல்ல வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள். நானே வேட்பாளரை பரிந்துரை செய்தேன். அந்த தொகுதியில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications