ஓபிஎஸ் உடன் உள்ள எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் நிலை என்ன? வந்து விழுந்த கேள்வி.. இபிஎஸ் பதில் இதுதான்
ஓ பன்னீர்செல்வம் பின்னால் உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அவர்களின் நிலை என்ன? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
சென்னை: அதிமுகவிற்காக உழைத்தவர்கள் பாடுபட்டவர்கள் தாராளமாக வரலாம். ஒரு சிலரைத் தவிர. வேறு யார் வந்தாலும் வரவேற்போம். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வெற்றி என்ற செய்திக்கு இந்த தீர்ப்பு கைகொடுக்கும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை கோஷம் ஒலித்தது. இதையடுத்து தலைமைப்பதவியை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக இரு ஓ பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமி இடையே பிளவு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு வழக்கு
இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

செல்லும் என்று தீர்ப்பு
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்ததுள்ளது. இதன்படி, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.

தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது
இந்த நிலையில், திருங்கலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துவிட்டது. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்ட போராட்டத்தில் அதிமுகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. இனி எழுச்சியோடு அதிமுக பணியாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

எப்போது பொதுச்செயலாளர் ஆகப்போறீங்க?
அப்போது பொதுச்செயலாளர் எப்போது ஆகப்போறீங்க என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் அது முடிவு செய்யப்படும். ஓபிஎஸ் இரண்டாவது தர்மயுத்தம் நடத்த இருப்பதாக சொல்வது பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். நீதிமன்றத்திற்கு மீண்டும் சென்றால் செல்லட்டும். அதைப்பற்றி கவலையில்லை. உச்ச நீதிமன்றம் தான் இறுதியானது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் மேல் மூறையிடு செய்தனர். உச்ச நீதிமன்றமும் தெளிவான தீர்ப்பை கொடுத்துள்ளது.

ஒரு சிலரைத்தவிர, யார் வந்தாலும்
இந்த தீர்ப்பின் மூலம் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் நிறைவேற்ற்ப்பட்டுள்ளது. தனிக்கட்சியை தொடங்கிய டிடிவி தினகரனுக்கு எங்கள் கட்சியை பற்றி பேச தகுதி இல்லை. தேவையும் இல்லை. டிடிவி தினகரனின் கட்சியும் செல்வாக்கு ஏற்கனவே தெரிந்து விட்டது. கடந்த தேர்தலில் நிரூபணம் ஆகிவிட்டது. அதிமுகவிற்காக உழைத்தவர்கள் பாடுபட்டவரகள் தாரளமாக வரலாம். ஒரு சிலரைத்தவிர. வேறு யார் வந்தாலும் வரவேற்போம்.

ஈரோடு வெற்றிக்கு உதவும்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வெற்றி என்ற செய்திக்கு இந்த தீர்ப்பு கைகொடுக்கும் . 2024- நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை பொருத்தவரை நாள் உள்ளது. அப்போது பேசிக்கொள்ளலாம். எங்களுடைய கூட்டணிகள் தொடரும் என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். இப்போது அதற்கு அவசரம் இல்லை. இப்போது முக்கியம் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்தான். ஏற்கனவே எடுத்த முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. யார் யார் நீக்கப்பட்டார்களோ அது நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் நிலை
அப்போது ஓ பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் நிலை என்ன? சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அதற்கு நீங்கள் அவரைத்தான்கேட்க வேண்டும். அந்த எம்.எல்.ஏக்களிடம் தான் போய் அவர்கள் நிலைமையை கேட்க வேண்டும். நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) போய் கேட்க வேண்டும். அவரைத்தான் கேட்க வேண்டும். அதிமுக வலுவாகவே உள்ளது. என்று கூறினார்.












Click it and Unblock the Notifications