நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு! சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இரு தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை அதாவது நவம்பர் 27ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.
தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை, இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை என்பதால் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த மூன்று முறையும் தனுஷ்- ஐஸ்வர்யாவை ஒன்று சேர்க்க சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு இருவருமே உடன்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் இந்த முறை ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாலும், சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படாததாலும் கடந்த நவ.21 ஆம் தேதி ஐஸ்வர்யா கோர்ட்டில் ஆஜரானார்.
இந்த நிலையில் தனுஷ் படப்பிடிப்பு முடித்துவிட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார். அப்போது இருவரும் நீதிபதி சுபாதேவி முன் ஆஜரானார்கள். கோர்ட் அறையின் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டன. இருவரிடமும் நீதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இருவரும் விவாகரத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நவ.27 ஆம் தேதியான நாளை வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் மியூசுவலாக இருவருமே பிரிய விரும்புவதால் நாளை அவர்களுக்கு பிரிவு கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications