சமூகநீதியாளர்கள் புறக்கணிப்பு.. சனாதானிகளுக்கு உபசரிப்பா? திமுக அரசுக்கு நடிகர் கவிதா பாரதி கேள்வி
சென்னை: திமுகவின் வெற்றிக்காக பாடுபட்ட இயக்குநர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்களை ஒதுக்கி வைத்துவிட்டு சனாதனவாதிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதாக நடிகரும் இயக்குநருமான கவிதா பாரதி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி என்ற பெயரில் டிவி சேனல் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த தொலைக்காட்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவியது.
இதனை நிர்வகிப்பதற்கு முதன்மை செயல் இயக்குநர் பதவியை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்காணல்கள் நடத்தப்பட்டன. இதில் மணிகண்ட பூபதி என்பவர் கல்வி தொலைக்காட்சியின் CEO ஆக நியமிக்கப்பட்டார்.

மணிகண்ட நியமனம் நிறுத்திவைப்பு
இந்துத்துவ சிந்தனை கொண்டவரான மணிகண்ட பூபதியின் நியமனத்துக்கு பத்திரிகை துறையினரும் அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கல்வியியல் துறையின் மூத்த ஊடகவியலாளர் சுசி திருஞானம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையே எழுதினார். அதில் மணிகண்ட பூபதியின் நியமனத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மணிகண்ட பூபதியின் நியமனம் நிறுத்திவைக்கப்பட்டது.

நடிகர் கவிதா பாரதி
இந்த நிலையில் அருவி, ராட்சசி, ரைட்டர், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகரும் இயக்குநருமான கவிதா பாரதி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், "மத்தியில் பா.ஜ.க.வும், மாநிலத்தில் அ.தி.மு.க.வும் ஆட்சியில் இருந்தபோது திமுக.வுக்காக முழங்கியது
கரு.பழநியப்பன். செம்மொழி பாடலைப் படம் பிடிக்கும் பெரும் பொறுப்பை நீங்கள் கொடுத்த கெளதம் வாசுதேவ் மேனன் அல்ல.

விக்னேஷ் சிவன்
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வைப் புறக்கணியுங்கள் என்று அறிக்கை விட்டவர் நான் திராவிடன் என்று அறிவித்த வெற்றிமாறன். சதுரங்கப் போட்டியை படம்பிடிக்க நீங்கள் வாய்ப்பளித்த விக்னேஷ் சிவன் அல்ல.
தி.மு.க.வின் வெற்றிக்காக ஊர் ஊருக்கு நிகழ்ச்சி நடத்தியது தோழர் பூபாளம் பிரகதீஸ்வரன். கவின் கலை வளர்ப்பதற்கான குழுவில் நீங்கள் நியமித்த பிரசன்னா ராமசாமி அல்ல.

ஏளனம் செய்தவர்கள்
சனாதானவாதிகள் உங்கள் மீது சுமத்தும் அவதூறுகளுக்கெல்லாம் ஏறிக்கட்டி பதில் சொல்வது தமிழ்க்கேள்வி செந்திலும், தம்பி வீரமணியும்தான். கல்வித் தொலைக் காட்சிக்கு நீங்கள் நியமித்த மேதை மணிகண்ட பூபதி அல்ல. நீங்கள் டெல்லிக்கு காவடி தூக்கவில்லைதான் முதல்வர் அவர்களே.. ஆனால் நீங்கள் ஆட்சியில் அமர வேண்டுமென மக்களிடம் காவடி தூக்கியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். உங்களை ஏளனம் செய்பவர்கள் உற்சவ மூர்த்திகளாகிறார்கள்.

சனாதனவாதிகள் உபசரிப்பு
ஏற்றமிகு எதிர்காலத்துக்காக நீங்கள் தலைநிமிர்ந்து நடக்கிறீர்கள்..
அதேநேரம் உங்கள் காலடியில் நடக்கும் செயல்களையும் சற்றே குனிந்து பாருங்கள் என்று கேட்கும் நாங்கள் உங்கள் எதிரிகளல்ல தலைவனே. சமூக நீதிக்காக நிற்கும் தகுதியுடைத் தமிழர்களை வாசலுக்கு வெளியே நிறுத்திவிட்டு சனாதனவாதிகளை உபசரிக்கும் பெருந்தன்மை இந்த ஆட்சியின் பலவீனமாகிவிடக்கூடாது." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications