மதமும் கடவுளும் அரசியல்வாதிகளிடம் சிக்குவது ஆபத்து.. யாரை விமர்சிக்கிறார் நடிகர் கிஷோர்?
சென்னை: மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்தான போக்கு என நடிகர் கிஷோர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் அயோத்தி பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதையடுத்து சூட்டோடு சூடாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டது.

இதற்கு கடந்த 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இந்த விழாவில் ஏராளமான விஐபிகள் கலந்து கொண்டிருந்தனர். இதையடுத்து பால ராமரை பார்க்க கடந்த 23 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த இரு தினங்களில் பால ராமரை 5 லட்சம் பேர் தரிசித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ராமர் கோயில் விழாவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அங்கு மசூதியை இடித்துவிட்டு கோயிலை கட்டுவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பை விமர்சித்து நடிகர் கிஷோர் சமூக வலைதள பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் கோவில், மன்னர்கள், மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கே சென்றுவிட்டது போல் தெரிகிறது.
கடவுளின் பெயரில் சாமியார்களுடன் கைகோர்த்து மக்களை அடக்கி வருகிறார்கள். கோயிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது கோவிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி பேனர் வைத்துக் கொள்வது தொடர்ந்து நடக்கிறது.
மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும் அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்திற்கு எடுத்துச் செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாச்சாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications