நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் புறக்கணிக்கும்! தமிழக முதல்வர் அறிவிப்பு ஏற்புடையதல்ல! சரத்குமார்
சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காமல் புறக்கணிக்கப் போவதாக தெரிவிப்பது ஏற்புடையதல்ல என பாஜகவில் இணைந்தவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை என்பதால் நிதி ஆயோக்கை புறக்கணிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில்பாதை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும் கூட, சூழலியல் காரணங்களைக் காட்டி அத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. ரயில்வே திட்டங்களுக்கு 2749 ஹெக்டேர் நிலம் தேவையாக இருக்கும் போது, 807 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படைப் பணிகளை தாமதம் செய்துவிட்டு உண்மைக்கு புறம்பாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் போக்கை திமுக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக் கூடாது.
மேலும், நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் நலன் கருதி, நமது உரிமையை பெற வேண்டும் என்றால், கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியதாவது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று 2 நாட்கள் முன்னதாக, நான் எனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன்.
3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழகத்துக்கு அறிவித்துள்ள ரயில்வே திட்டங்கள், தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மேம்பால விரைவு சாலை திட்ட ஒப்புதல் என சில கோரிக்கைகளை அதில் தெரிவித்திருந்தேன்.
ஆனால், எதையுமே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒருசில மாநில கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில், ஒருசில மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்துள்ளார்.
அறிவித்துள்ளார்களே தவிர அதையும் நிறைவேற்றுவார்களா? என்பது என்னை பொருத்தவரை சந்தேகம்தான். எப்படி தமிழகத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் இன்று வரை ஏமாற்றி வருகிறார்களோ அதேபோல அந்த மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
தமிழகம் 2 மிகப்பெரிய பேரிடர்களை சந்தித்தது. ரூ.37 ஆயிரம் கோடி வரை இழப்பீடு கேட்டிருந்தோம். தொடர்ந்து வலியுறுத்தி கேட்டு வருகிறோம்.
ஆனால், இதுவரை ரூ.276 கோடிதான் கொடுத்துள்ளார்கள். அதுவும் சட்டப்படி வரவேண்டிய தொகைதான். இதில் வேடிக்கை என்னவென்றால், பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். இதுதான் தமிழக மக்கள் மீது பாஜக வைத்துள்ள மதிப்பா?
தமிழகத்துக்கான எந்த சிறப்பு திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. நம் கோரிக்கை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவிக்கவில்லை.
தமிழகம் என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட்டில் இல்லை என்பதைவிட, மத்திய பாஜக ஆட்சியின் சிந்தனை, செயல் அளவிலும் தமிழகம் இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும்தான் இந்த அறிக்கையில் உள்ளது. ஜூலை 27-ம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன்.
ஆனால், பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications