Srikanth bail: தவறு செய்துவிட்டேன்! மகனை கவனிக்கணும்! ஜாமீன் கொடுங்கள்! ஸ்ரீகாந்த் கதறல்
சென்னை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் சார்பில் இன்று போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தான் தவறு செய்துவிட்டதாக ஸ்ரீகாந்த் கண்ணீர் மல்க ஜாமீன் கேட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடைய செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதில் உள்ள வாட்ஸ் ஆப் தகவல்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த பிரதீப் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர், "நடிகர் ஸ்ரீகாந்த், "தீங்கரை" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரசாத் தயாரித்து வருகிறார்.
பிரசாத், ஸ்ரீகாந்துக்கு போதை பொருள் தேவைப்படுவதாகக் கூறி என்னிடம் இருந்து கொக்கைனை வாங்கிச் சென்றார்" என்று பிரதீப் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அவருடைய ரத்த மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியதில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து ஸ்ரீகாந்த், சென்னை எழும்பூர் 14 ஆவது பெருநகர நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை சிறையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணையில் 40 முறை போதை பொருளை வாங்கியதாகவும் இதற்காக ரூ 4.72 லட்சம் பிரதீப்புக்கு ஜிபேயில் செலுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
மேலும் ஸ்ரீகாந்த் "தான் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல மாட்டேன். சாட்சிகளை அழிக்க முயற்சிக்க மாட்டேன். போலீஸாரின் முழு விசாரணைக்கும் ஒத்துழைப்பேன்.
எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே எனக்கு ஜாமீன் வேண்டும்" என நீதிபதியிடம் கெஞ்சினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜாமீன் வழங்க மறுத்தார். வேண்டுமானால் போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் இன்று ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த ஜாமீன் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:தவறு செய்துவிட்டேன். உடல்நிலை சரியில்லாத மகனை கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. நான் கண்டிப்பாக அவர்களுடன் இருந்தாக வேண்டும் என ஸ்ரீகாந்த் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் வீட்டிலும் 3 பாக்கெட் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஸ்ரீகாந்தின் கைரேகை இருந்ததும் தெரியவந்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு "ரோஜா கூட்டம்", "ஏப்ரல் மாதத்தில்", "மனசெல்லாம்", "பார்த்திபன் கனவு" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். எம்சிஏ பட்டதாரியான இவர் திருப்பதியை சேர்ந்தவர். அதாவது இவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.
ஸ்ரீகாந்த், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் "நண்பன்", படத்தில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு வந்தனா எனும் எம்பிஏ பட்டதாரியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த திருமணமே பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications