அரசியலுக்கு திடீர் முழுக்கு.. யூ டர்ன் போட்ட கருணாஸ்.. போலி வியாபார அரசியல் என விமர்சனம்
சென்னை: திருவாடானை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த கருணாஸ் அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளார். இனி அவர் முழு நேரமாக சினிமாவில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு நந்தா படம் மூலம் கொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் கருணாஸ். இப்படத்தில் திருடனாக நடிப்பார். இந்த படத்தில் இவரது காமெடி காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைத்தன.
இவர் 12 வயது முதல் கானா பாடல்களை பாடி வருகிறார். பாப் பாடகராகவும் அறியப்படுகிறார். திண்டுக்கல் சாரதி படத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடித்திருப்பார். அது போல் அம்பாசமுத்திரம் அம்பானி, சாதாரணமாக மளிகை கடை வைத்திருக்கும் ஒரு நபர் தனது விடாமுயற்சியால் எப்படி அம்பானி ரேஞ்சுக்கு உயர்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாகும்.

எம்எல்ஏ
இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படை எனும் அரசியல் அமைப்பை தொடங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார்.

25 சதவீத இடஒதுக்கீடு
2021 ஆம் ஆண்டு இவருக்கு அதிமுக சார்பில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கிடைக்கவில்லை. முக்குலத்தோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு, சீர்மரபினர் குறித்த கணக்கெடுப்பை தொடங்குவது ஆகியவற்றை எந்த கட்சி அமல்படுத்துவதாக கூறுகிறதோ அதற்கே தனது ஆதரவு என தெரிவித்தார்.

முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் நடிகர் கருணாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார் கருணாஸ். இந்த படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து கருணாஸ் கூறுகையில் கிராமிய கானா பாடகராக என் கலை வாழ்வைத் தொடங்கியிருந்தாலும், இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது சினிமா தான்.

சினிமாவில் கருணாஸ் புதிய அவதாரம்
தாய்மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற இருக்கிறேன். கடைசி வரை கற்றுக் கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக்கொண்ட வெற்றிக்கு, என் நன்றி. தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறை சாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

அரசியலுக்கு முழுக்கு
ராமனுக்கு அணிலாக இருப்பதை போல், இந்த வெற்றி அணியில் வெற்றி மாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். போலி வியாபார அரசியலை புறந்தள்ளிவிட்டு எனது கலைத்தாய் வீட்டுக்கு திரும்பியிருக்கிறேன். நீண்டகாலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசலே வாசல் திறந்து விட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications