விஜயை இனி தொட முடியாது.. அமலான ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு! களமிறங்கிய வீரர்கள் யார் தெரியுமா?
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய்க்கு இன்று முதல் ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புக்கு என்ன காரணம்? பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் யார்? மொத்தம் எத்தனை வீரர்கள் ஈடுபட உள்ளனர்? விஜய்க்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு வழங்கப்படும் என்பது பற்றி சிஆர்பிஎஃப் உதவி ஆணையர் ராமர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
நடிகராக இருக்கும் விஜய் அரசியல் அவதாரம் எடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு தற்போது விஜய் தயாராகி வருகிறார். தற்போது அவர் கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் பட்சத்தில் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

அதன்படி மே மாத இறுதி அல்லது ஜுன் மாதம் முதலில் நடிகர் விஜய் முழுநேரமாக அரசியலில் ஈடுபடலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜயின் வருகை என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள், இளம்பெண்கள் என்று விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகள் விஜய்க்கு அப்படியே கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால் தற்போதைய சூழலில் பிற கட்சிகளை போல் சமூக வலைதளங்களில் விஜய் ஆதரவாளர்கள் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட தொடங்கி உள்ளனர். அதோடு கிராமங்கள், நகரங்களிலும் விஜய் கட்சி நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தவெகவிற்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. நடிகர் விஜய் நடிகராக புகழ்பெற்றவர். இப்போது அவர் அரசியலுக்குள்ளும் நுழைந்துள்ளதால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை மோப்பம் பிடித்து உளவுத்துறை அலர்ட் செய்த நிலையில் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
இந்நிலையில் தான் இன்று முதல் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிஆர்பிஎஃப் உதவி ஆணையர் ராமர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி ராமர் இன்ற கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு இருக்கும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு சமீபத்தில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இன்று முதல் நவீன ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎஃப் விஐபி பிரிவு கமாண்டோ படையினர் அவரது பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவர் செல்லும் இடம், தங்கும் இடம் என்று எல்லாம் பகுதிகளிலும் இந்த பாதுகாப்பு 24 மணிநேரமும் இருக்கும்.
விஜயின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் என்எஸ்ஜி, எஸ்பிஜி போன்ற சிறப்பு பாதுகாப்பு படையில் பணியாற்றி திரும்பியவர்கள். இக்கட்டான நிலையிலும், அச்சுறுத்தலான வேளைகளிலும் முக்கியஸ்தர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் ரொட்டேஷன் முறையில் மாற்றினாலும் பயிற்சி முடித்து விட்டு மீண்டும் இதே பணிக்கு வருவார்கள். ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு என்பது 8 பேர் கொண்ட குழு. மொத்தமாக 8 பேர் நவீன ஆயுதம் ஏந்தி முழு பாதுகாப்பை வழங்குவார்கள்'' என்றார்.
நம் நாட்டை பொறுத்தவரை 7 வகையான பாதுகாப்புகள் உள்ளன. இதில் எஸ்பிஜி பாதுகாப்பு என்பது தான் முதன்மையானது. இது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக இசட் பிளஸ் (ஏஎஸ்எல்), இசட் பிளஸ், இசட் பிரிவு பாதுகாப்புகள் உள்ளன. அதன் பிறகு ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் பிரிவு பாதுகாப்புகள் வரும்.இதில் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பில் குறைந்தபட்சம் 8 முதல் 11 வீரர்கள் வரை பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதில் எஸ்பிஜி, என்பிஜி பிரிவில் பணியாற்றியவர்கள், போலீசார் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.
இந்த பாதுகாப்புகள் என்பது பிரபலங்களுக்கு வழங்கப்படும். அதாவது அரசியல்வாதிகள், நடிகர்கள் உள்பட புகழ்பெற்ற நபர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்பட்சத்தில் அதன் தன்மையை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இந்த பாதுகாப்புகள் வழங்கப்படும். இந்த பாதுகாப்பை உறுதி செய்தது மத்திய உள்துறை அமைச்சகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications