நடிகர் விஜய் முதலில் சினிமாவுக்கு குட்பை! அப்புறம் அரசியல்- ப்ளானை பகிரங்கமாக போட்டுடைத்த சீமான்!
சென்னை: நடிகர் விஜய் இன்னும் ஒரு வருஷத்தில் நடிப்பதை நிப்பாட்டிருவார்.. உன் தியேட்டர் தயவு அவருக்கு தேவைப்படாது.. அப்ப அரசியல் பேசினால் என்ன செய்வீங்க? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழ்நாட்டில் தம்பி விஜய் படத்தின் பாட்டு வெளியிடவிடாமல் தடுக்க வேண்டிய காரணம் என்ன? திமுகவுக்கு என்ன வந்துச்சு?

விஜய்க்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு?: இவ்வளவுதான் ரசிகர் வரனும்னு சொல்றீங்க.. நீங்க மாநாடு நடத்தும் போது இவ்வளவுதான் தொண்டர் வரனும்னு சொல்றீங்களா? அய்யா ஸ்டாலின் அல்லது தம்பி ஸ்டாலின் கூட்டத்துக்கு இவ்வளவுதான் தொண்டர்கள் வரனும்னு சொல்றீங்களா? அப்படி எதுவும் விதி இருக்கிறதா? உங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுக்க காவல்துறை இருக்கிறது. வேலை செய்ய முடியுது? ரகுமானுக்கும் விஜய்க்கும் கொடுக்க முடியாதா? கொடுக்க முடியாதான்னு சொல்லுங்க? ஒரு அரங்கத்தில் நடக்கிறதுக்கு கொடுக்க முடியாதா? போன தடவை அதே அரங்கத்துல பாட்டு வெளியிடும் போது ஏன் தடை விதிக்கலை? ஏன் நெருக்கடி கொடுக்கலை?

விஜய்க்கு 'அரசியல்' நெருக்கடி: இப்ப அரசியலுக்கு வரப் போறார்னு நெருக்கடி கொடுக்கிறீங்க? ஏதாவது அரசியலா பேசுவார்னு நெருக்கடி தருகிறீங்க.. அவருக்கு 1,000 திரை அரங்குகள் வெச்சிருக்கீங்க அந்த திரை அரங்குல அவருக்கு இடம் தரமாட்டீங்க? பாட்டையே வெளியிடாத நீ படத்தை எப்படி வெளியிட விடுவ? அவர் படத்தை தயாரிக்கலை.. போனா போகுதுன்னு விட.. இன்னொருத்தர் தயாரிச்சிருக்காரு.. அவருக்கு இழப்பு வரக் கூடாதுன்னு மவுனமா இருக்காரு.

ஓராண்டில் நடிப்பதை நிறுத்துவாரு..: இப்ப அரசியல் பேசுவார்னு நெருக்கடி கொடுக்கிறீங்க.. இன்னும் ஒரு வருஷத்தில் நடிக்கிறதை நிப்பாட்டிருவாரு.. உன் தியேட்டர் தயவு அவருக்கு தேவைப்படாது. அப்ப அரசியல் பேசினார்னா என்ன பண்ணுவீங்க? அதான் பிரச்சனை. அன்னைக்கு நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் போராடுச்சு.. இன்னைக்கு போராடினா திமுக ஆட்சிக்கு எதிராக இருந்துவிடும்.. அதனால போராட யாரையும் அனுமதிக்க மாட்டாங்க.. இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னையில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்து சீமான் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications