சென்னைக்கு வந்ததும் வராததுமாய்.. விஜய் வீட்டுக்கே வண்டியை விட்ட பிகே.. காத்திருந்த முக்கிய ’தலைகள்’
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரபல வியூக வகுப்பாளரான பிரசாந்தி கிஷோர் சென்னை வந்துள்ளார். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நடிகராக இருந்து அரசியலை குதித்திருக்கும் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என முதல் மாநாட்டிலேயே அறிவித்திருந்தார். தற்போது மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் பிஸியாக இருக்கும் அவர் அடுத்ததாக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தை நடத்த தயாராகி வருகிறார்.

இதற்கிடையே கட்சியில் ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விஜய் கட்சியை நோக்கி ஏராளமானோர் இணைந்திருக்கின்றனர். அந்த வகையில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் கட்சியில் இணைந்த உடனேயே அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் தமிழக வெற்றிக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார ஆலோசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய் கூட்டணி குறித்து இன்னும் பேசவில்லை.. அதே நேரத்தில் கட்சி மாநாட்டின் போதே ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூட்டணி அமைக்க தயார் என விஜய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பல முக்கிய தலைகள் அந்த கட்சியில் இணைய இருக்கிறார்கள். குறிப்பாக பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார், ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளராக இருந்த மருது அழகராஜ், தினகரன் கட்சியில் இருந்து செந்தமிழன், அதிமுக - திமுகவைச் சேர்ந்த மேலும் சில முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்சியில் இணைய இருப்பவர்களின் பெயர் பட்டியல் விஜய் டேபிளுக்கு போயிருக்கிறது. அதில் சிலரின் பெயரை டிக் செய்துள்ள நிலையில், அவர்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் கட்சிக்கு வியூகம் வகுத்து தர புதிய வரவாய் இணைந்து இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு சில தகவல்களும் அறிவுரைகளும் விஜய்க்கு தரப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நாளை விஜய் கட்சி நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் இரவு சென்னை வந்தார் பிரசாந்த் கிஷோர். விமான நிலையத்திலிருந்து நேரடியாக நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு அவர் சென்றிருக்கிறார். ஏற்கனவே அங்கு காத்திருந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார பிரிவு ஆதவ் அர்ஜுனா, வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் இரவிலும் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
நாளை கட்சியில் சேரப் போவது யார், என்ன மாதிரியான விஷயங்கள் பேச வேண்டும், கூட்டணி தொடர்பான அறிவிப்பு உள்ளிட்டவை அதில் இடம்பெற்றாக கூறப்படுகிறது. நாளைய நிகழ்வுகள் இன்று இறுதிச் செய்யப்பட்டு, அதன் அடிப்படையிலேயே விஜயின் பேச்சு இருக்கும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.












Click it and Unblock the Notifications