இளம் நடிகரை தாக்கி ரவுடித்தனம்.. போலீஸ் வழக்கு பதிவு.. நடிகர் விமல் எஸ்கேப்!
நடிகர் விமல் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: பிற மொழி நடிகரை தாக்கி அட்டூழியம் செய்த பிரபல தமிழ் நடிகர் விமல், இப்போது தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட நடிகர் அபிஷேக் என்பவர் சென்னை விருகம்பாக்கத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடிகர் விமல் ஃபுல்போதையில் தனது நண்பர்களுடன் சென்று, தங்க ஒரு ரூம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் எல்லா ரூமும் புக் ஆகிவிடவும், எந்த ரூமும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் சொல்லிவிட்டது.

வம்பு செய்தார்
இதனால் மேனேஜனருடன் தகராறில் ஈடுபட்ட விமல், ஹோட்டல் வெளியே நின்று கொண்டிருந்த நடிகர் அபிஷேக்கிடம் வம்பு செய்திருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, விமல் அபிஷேக்கை தாக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தகராறு
இதையடுத்து மதுபோதையில் விமல் தன்னை தாக்கிவிட்டதாக நடிகர் அபிஷேக் உடனடியாக புகார் அளிக்கவும், அதனடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் விமல் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323, 294 பி-யின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவு
இந்நிலையில் போலீசுக்கு பயந்து விமல் தலைமறைவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் மிக தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளனர். இதனிடையே, நடிகர் விமல் அபிஷேக்கை தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்
ஆரம்ப கட்டத்தில் களவாணி, தூங்காநகரம், வாகைசூடவா, கலகலப்பு, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பொதுமக்களின் அபிமானத்தை பெற்றவர் விமல். ஆனால் பெரிய அளவுக்கு இவரால் முன்னணி நடிகராக முடியவில்லை.

குடிப்பழக்கம்
இதில் குடிப்பழக்கமும் சேர்ந்துகொண்டதால், வரும் வாய்ப்புகளும் காணாமல் போவதாக தெரிகிறது. நல்ல நடிகர் ஒருவர் இப்படி குடிப்பழக்கத்துக்கும் ஆளாகி, இப்படி சர்ச்சையான விஷயங்களில் ஈடுபட்டுள்ளாரே என்று தமிழ் திரையுலகினர் மன வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications