Vishal: எனக்கு திருமணம் எப்போது? இன்று பிற்பகல் அறிவிக்கிறேன்- விஷால்! மறுபடியும் மொதல்ல இருந்தா?
சென்னை: நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளை இன்று ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது திருமணம் குறித்து இன்று பிற்பகல் நல்ல செய்தி அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டுப் பேசிய விஷால், "எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும்" என்று கூறினார்.

ரஜினிக்கு பாராட்டு விழா
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா நடத்த பரிசீலனை செய்து வருவதாகவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில், விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஷாலின் திருமணம் அவரது பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்காததால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், நடிகர் விஷால் தரப்பில், திருமணம் நின்றுபோகவில்லை, தள்ளிப் போயுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
'யோகி' திரைப்பட விழாவில் நடிகர் விஷால், நடிகை தன்ஷிகாவை தான் காதலிப்பதாக அறிவித்தார். மேலும், இவர்களது திருமணம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி, புதிதாகக் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
ஆனால், திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறாததால், விஷாலின் திருமணம் மீண்டும் நின்றுவிட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே, ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்பவருடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தத் திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விஷால் தரப்பில் விசாரித்தபோது, "திருமணம் நின்றுபோகவில்லை, தள்ளிப் போயுள்ளது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பணிகள் முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்திலேயே இவர்களது திருமணம் நடைபெறும்" எனத் தெரிவித்தனர். எனவே, ரசிகர்கள் விரைவில் இவர்களது திருமணத் தேதி அறிவிக்கப்படும் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications