லேட்டாக பாஜகவுக்கு வந்த குஷ்புவுக்கு சீட்! ராஜபாளையத்தில் ஏமாற்றம்.. கடிதத்தில் குமுறிய கவுதமி
சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டு அது எனக்கு கொடுக்கப்படவில்லை என நடிகை கவுதமி தனது ராஜினாமா கடிதத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நடிகை கவுதமி தனது ராஜினாமா கடிதத்தை தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய பாஜக, தமிழக பாஜக ஆகிய ட்விட்டர் ஹேண்டில்களுக்கும் டேக் செய்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், நான் கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். தேசத்தின் வளர்ச்சிக்காக எனது பணியை அர்ப்பணிக்கவேயை கருத்தில் கொண்டு கட்டமைப்புக்காக நான் எனது முயற்சிகளை 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தேன்.
என் வாழ்வில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும் நான் கட்சிக்கு சிறப்பாகவே பணியாற்றினேன். இன்று என் வாழ்வில் நம்பவே முடியாத ஒரு நெருக்கடியான சூழலில் நிற்கிறேன். எனக்கு கட்சித் தலைவர்களும் உருதுணையாக இல்லை. என்னை ஏமாற்றி, வாழ்நாள் சேமிப்பை மோசடி செய்த நபருக்கு அவர்கள் உதவி செய்து வருவதையு்ம நான் அறிவேன்.
நான் 17 வயது சினிமாவுக்கு நடிக்க வந்தேன். சினிமா, டெலிவிஷன், ரேடியோ, டிஜிட்டல் மீடியா என 37 ஆண்டுகளாக என் வாழ்நாளை செலவு செய்துள்ளேன். ஒட்டுமொத்த என் வாழ்க்கையையும் சினிமாவுக்காக அர்ப்பணித்ததால் எனது குழந்தையின் எதிர்காலத்திற்காக இந்த வயதில் எனது நிதி நிலை நன்றாகவே இருந்தது.
இந்த சூழலில் அழகப்பன் என்பவர் என்னையும் என் மகளையும் அவருடைய குடும்பத்தில் ஒருவராக கருதினார். அவரது குடும்ப உறுப்பினர்களும் எங்கள் மீது பாசத்தை காட்டினர். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானதால் அவர் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். ஆனால் அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரூ 2.15 கோடி சொத்துகளையும் மோசடி செய்துள்ளார்.
என்னுடைய பத்திரங்களும் அவரிடம் உள்ளன. எனவே பணத்தையும் சொத்துகளையும் மீட்க நான் சட்டபடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். நான் அழகப்பன் மீது புகார் அளித்தும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதனால் ராஜபாளையத்தில் நான் அந்த பகுதி மக்களுக்காக கடுமையாக உழைத்தேன். பாஜகவின் அடிமட்டத்தை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டேன். ஆனால் இந்த வாக்குறுதி கடைசி நேரத்தில் இல்லாமலே போனது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நான் எனது பணிகளை பாஜகவுக்காக தொடர்ந்து செய்துக் கொண்டு வந்தேன் என கவுதமி மனவேதனையில் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமிக்கு ராஜபாளையத்திலும் குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் கவுதமிக்கு பிறகு கட்சியில் இணைந்த குஷ்புக்கு அவர் நினைத்தபடி ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் கிடைத்தது. ஆனால் ராஜபாளையத்தில் அதிமுக போட்டியிட்டதால் கவுதமிக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போனது. எனினும் வேறு எங்காவது போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என கருதி ஏமாற்றமே விஞ்சியது.












Click it and Unblock the Notifications