சீனியாரிட்டி பார்க்க இதென்ன "ரேஷன்" கடையா? அமைச்சர் பதவி பெற உதயநிதிக்கும் உரிமை உண்டு.. கஸ்தூரி
சென்னை: மற்ற எம்எல்ஏக்களுக்கு எப்படி அமைச்சர் பதவியை பெற உரிமை உள்ளதோ அதே உரிமை மக்களால் தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கும் உண்டு என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்த போதே திமுகவையும வாரிசு அரசியலையும் பிரிக்க முடியாது என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் உதயநிதி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கு டிடிவி தினகரன் முன் வைத்த விமர்சனத்தில், மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முதல்வர் ஸ்டாலின் ஏன் இத்தனை அவசரப்படுகிறார்? குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாகவே முதல்வர் தனது மகனை அமைச்சராக்கியுள்ளார் என்றார். அது போல் அதிமுகவின் ஆர்.பி. உதயகுமார், தமிழகமே இருளில் மூழ்கியுள்ள நிலையில் மகனுக்கு பட்டாபிஷேகத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தியுள்ளார் என விமர்சித்துள்ளார்.

கஸ்தூரி
இதுகுறித்து நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் என எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. பல துறைகளில் நன்கு ஜொலித்தவர்களின் மகன்கள், மருமகன்கள், உறவினர்கள் எந்த தகுதியும் இல்லாமல் முழுக்க முழுக்க அவர்களுடைய பெற்றோரின் மூலம் வழிவழியாக பதவிகளையும் வெற்றிகளையும் குவிக்கிறார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அவர்களை போல் உதயநிதி ஸ்டாலின் இல்லை. அவருக்கு திறமை இருக்கிறது. அமைச்சர் பதவிக்கு தகுதிவாய்ந்த அரசியல்வாதி. எல்லாவற்றிற்கும் மேல் தமிழக மக்களால் உதயநிதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். மற்ற எம்எல்ஏக்கள் எப்படி அமைச்சர் பதவியை பெற உரிமை உள்ளதோ அதே உரிமை உதயநிதிக்கும் உள்ளது. அமைச்சர் பதவி என்பது ரேஷன் கடை இல்லை. யார் முதலில் வருகிறார்களோ யார் நீண்ட நேரம் காத்திருக்கிறார்களோ அவருக்கே கொடுப்பதற்கு.

சீனியாரிட்டி
அமைச்சர் பதவி சீனியாரிட்டியை பார்த்தோ அல்லது விசுவாசத்தை பார்த்தோ கொடுக்கப்பட வேண்டிய பதவி இல்லை. அந்த பணிக்கு யார் சிறந்தவர்களோ அவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு சரியான தேர்வு. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கும், விளையாட்டு துறைக்கும் அரசுக்கும் அவருடைய கட்சிக்கும் என்ன பங்களிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எந்த துறையாக இருந்தாலும் வாரிசு என்பது தவிர்க்க முடியாதது.

அரசியல் தகுதியானவர்கள்
அரசியலில் தகுதியானவர்கள் பாராட்டப்பட வேண்டும். எல்லாவற்றையும் வாரிசு அரசியல் என குற்றம்சாட்டிவிட முடியாது. இவ்வாறு கஸ்தூரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நல்ல நாள் பார்த்து உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 14ஆம் தேதி டிசம்பர் மாதம் காலை 9.30 மணிக்கு நல்ல சுபதினம். அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்ததம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு என கஸ்தூரி விமர்சித்திருந்தார். மற்றொரு ட்வீட்டில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications