‛‛அவதூறு பேச்சு’’.. திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையரிடம் நடிகை ராதிகா புகார்
சென்னை: திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகை ராதிகா குறித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனை ராதிகா சரத்குமார் கடுமையாக கண்டித்தார். இந்நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை கோரி அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகாரளித்துள்ளார்.
திமுகவில் மேடை பேச்சாளராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் பொதுக்கூட்ட மேடைகளில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை கடுமையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக பெண் நிர்வாகிகள் பற்றிய அவரது பேச்சு என்பது அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகும்.

சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது சர்ச்சை பேச்சால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாஜகவில் இருக்கும் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் மற்றும் ஆளுநர் ரவி பற்றி அவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு சமீபத்தில் அவர் மீண்டும் திமுகவில் இணைத்து கொள்ளப்பட்டதோடு, மேடைகளில் பேசி வருகிறார். இந்நிலையில் தான் காஞ்சிபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த நடிகர் சரத்குமாரை விமர்சனம் செய்தார். அதாவது இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாகவும், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியிருந்தார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் தன்னை பற்றி அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதிகா சரத்குமார் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்த பேச்சை நடிகை ராதிகா சரத்குமார் கடுமையாக கண்டித்து இருந்தார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், ‛ ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே... அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on திமுக'' எனக்கூறியிருந்தார்.
மேலும் அந்த பதிவில் ராதிகா சரத்குமார் திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்திருந்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் அவதூறு பேச்சை முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு கொண்டு செல்லும் வகையில் ராதிகா சரத்குமார் இப்படி செய்திருந்தார். ஆனால் திமுக தரப்பில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதனால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications