நடிகை ராதிகா சரத்குமார்.. திடீர்னு திமுகவில் மேடையில்.. கருணாநிதி டாபிக் வேற.. அப்ப "அதே"தானா.. வாவ்
நடிகை ராதிகா சரத்குமார் திமுக மேடையில் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் ஷேர் ஆகின்றன
சென்னை: திமுக விழாவில், பிரபல நடிகை ராதிகா சரத்குமார் பங்கேற்று பேசியுள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ராதிகா பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திமுக சார்பில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், நடிகை ராதிகா சரத்குமார் முன்னிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு மகளிர் தின சிறப்பாக புடவை பரிசாக வழங்கப்பட்டது.

கோலங்கள்
முன்னதாக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு விழாவில் பேசியபோது, கோலம் போடும் பணி, சமையல் பணி, துணி துவைக்கும் பணி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பணி என இப்படி பல வேலைகள் இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ராதிகாவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மகளிர்கள் ஆர்வமுடன் வந்துள்ளார்கள்.. ஒரு நாட்டில் மகளிருக்கு உண்டான அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும், எந்த நாட்டில் இவை அனைத்தும் செயல்படுகிறதோ அந்த நாடு மிகப்பெரிய அளவில் உயரக்கூடிய நாடாக இருக்கும்.

நடிகை ராதிகா
மகளிரின் ஒற்றுமைகளை, உறவுகளை நினைவுகூறும் வகையில்தான் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.. ஒரு காலத்தில் சொல்வார்கள் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொல்வார்கள். ஆனால், பெண்களை அடிமைப்படுத்தும் காலம் மாறி வங்கிகளுக்கு கூட பெண்களே செல்லும் ஒரு உரிமையை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் அதுதான் தமிழகத்தின் வளர்ச்சி.. வாங்கிய கடனை அடைத்து, மேலும் 3400 கோடி ரூபாய் மகளிர் சுயஉதவி குழுவிற்கு கடனையும் வழங்கி உள்ளார் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் என்றார் அமைச்சர் சேகர் பாபு.. இதையடுத்து, நடிகை ராதிகா விழாவில் பேசினார்.

கலைஞர் எம்ஆர் ராதா
அப்போது, "இது அரசியல் விழாவாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் பெண்களுக்கான விழாவாக ஒருங்கிணைத்து இருக்கிறார்கள்.. இதில் நான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக பங்கேற்று இருக்கிறேன். அவரிடம் நான் பயிற்சி பெற்றது இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் இன்னும் அவரின் குடும்பத்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். அதுபோல் என் அப்பா எம்ஆர் ராதா மற்றும் கலைஞர் கருணாநிதி இருவரின் நட்பு அற்புதமானது.. பொதுவாக, இந்த ஆண்களை கெடுப்பதே பெண்கள்தான்.. ஆண்மகனை தயவுசெய்து கெடுத்து விடாதீர்கள்..

விஷம் அமிர்தம்
ரொம்ப விழுந்து விழுந்து அவர்களை கவனிப்பதுதான் பிரச்சனையே.. ஏன், அவங்களே சாப்பாடு போட்டுக்கிட்டு சாப்பிட்டால்தான் என்னவாம்? ஒன்னும் ஆகாது.. பசித்தால் அவர்களே சாப்பாடு போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.. எல்லாருமே நல்லாதான் இருப்பாங்க.. ஆனால் நீங்க அவங்களை கெடுத்து விடாதீர்கள்.. இங்கேயிருக்கும் சில ஆண்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.. ராதிகாவை வேற எதுக்கோ கூப்பிட்டால், சோறு போட வேண்டாம் என்று சொல்கிறாரே என்று நினைக்கிறார்கள்.. அப்படி நான் சொல்லவில்லை.. எல்லாரையும் கவனிக்க வேண்டும்.,. ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்தானே.. அதுபோலத்தான், ஆண்களை அளவுக்கு மீறி நாம் பார்த்துக் கொண்டால், அது நமக்கே விஷமாகிவிடும் என்பதையும் பெண்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார் ராதிகா.

சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ராதிகா, இந்த விழாவில் பங்கேற்றுள்ளது பலரின் கவனத்தையும் திருப்பி வருகிறது.. இது ஒரு மகளிர் விழா என்பதால் ஒரு பிரபல நடிகையாக, சக அரசியல்வாதியாக ராதிகா கலந்து கொண்டதாக தெரிகிறது.. ஆனால், இன்றைய தினம் மேடையில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்தும் புகழ்ந்து பேசியுள்ள நிலையில், சமக அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, சமக தலைவர் சரத்குமார் ஒரு பேட்டி தந்திருந்தார்..

தூள் சரத்குமார்
அதுமட்டுமல்ல, இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. கட்சி தொடங்கியது முதல் பெரும்பாலும் அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வந்த சரத்குமார், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதுதான் அங்கிருந்து வெளியேறினார். இதற்கு பிறகு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து மறுபடியும் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்த சரத்குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்பட்டது.. இதனிடையே தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான், தனித்தே தேர்தலை சந்திப்பது என்றும் முடிவெடுத்தாராம். இதற்கு பிறகுதான், அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகிவிட்டதாக சரத்குமார் அறிவித்திருந்தார். இப்போது, விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், சமகவின் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை அவரது தொண்டர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications