செம திட்டம்.. ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை ஆஹோ ஓஹோவென பாராட்டிய நடிகை சமீரா ரெட்டி!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் குறித்து மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்லும் நோக்கில், "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற சூப்பரான திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நலம் காக்கும் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களின் தொடர்ச்சியாக, மக்கள் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு சென்று அதிக செலவு செய்வதை தவிர்க்கும் வகையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதே முக்கிய இலக்கு.
சிறப்பு மருத்துவ முகாம்கள்
இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் பல்வேறு விதமான மருத்துவ சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இந்த முகாம்கள் மூலம், நகர்ப்புறம், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 10 லட்சம் மக்களை சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, தரமான மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் இந்த முகாம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுக்க, 1256 இடங்களில் உயர்தர மருத்துவ மையங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தத் திட்டம், 17 சிறப்பு மருத்துவத் துறைகளை உள்ளடக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், புற்றுநோய் பாதிப்புகளை முகாம்களிலேயே கண்டறிந்து, கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்று பல்வேறு வகைகளிலான ஆண், பெண் என்று இரு பாலருக்குமான புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியும் சோதனைகளும் நடத்தப்படும்.
சனிக்கிழமை தோறும்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறுகிறது.
அடுத்த ஓராண்டு காலத்திற்குப் பொதுமக்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த முகாம்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அவர்களிடத்திலேயே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன் கிடைக்கும். இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.
சமீரா ரெட்டி பாராட்டு
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டிப் பேசியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. இந்த திட்டம் தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி.
நடிகை சமீரா ரெட்டி பேசுகையில், "8 -9 வருடங்களுக்கு முன்பு எனக்கு Alopecia Areata நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் எனது உடல்நலம் குறித்து மிகவும் கவலைப்பட ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள், பாதிப்புகள் அதிகமான பிறகுதான் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிக முக்கியமானது.
பல உயிர்கள் காப்பாற்றப்படும்
தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த முகாம்களில் மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம் என அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் மக்கள் மத்தியில் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது பல உயிர்களைக் காக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications