எடப்பாடியின் தைரியத்தை பாருங்க! மதுரையில் மாநாடு ஏன் நடத்துறாரு தெரியுமா? நடிகை விந்தியா விளக்கம்
சென்னை: எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருப்பதால்தான் மதுரையில் மாநாட்டை நடத்துகிறார் என நடிகை விந்தியா விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை இன்று நடத்தி வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்கும் முயற்சிகளை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய மாநாடு இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது. மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுகவின் கொடியை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து பூக்கள் துவப்பட்டன. எடப்பாடி பழனிசாமி தங்கியிருக்கும் ஹோட்டல் முதல் அவர் மாலை புறப்பட்டு மாநாட்டு கூட்டத்திற்கு வரும் வரை ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்படுகிறது.
காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் பூக்கள் தூவப்படுகின்றன. அதாவது காலையில் கொடியேற்றத்தின் போதும், மாலையில் மாநாட்டுக்கு எடப்பாடி வருகையின் போதும் பூக்கள் தூவப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு 3 வேளையும் சைவ சாப்பாடு வழங்கப்படுகிறது. இதற்காக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 100க்கும் மேற்பட்ட கவுன்ட்டர்கள் உள்ளன. தொண்டர்களின் பொழுதுபோக்கிற்காக நடன நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடத்தப்படுகிறது.
இந்த மாநாடு குறித்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா கூறுகையில் அதிமுக ஒரு பலமான எதிர்க்கட்சியாகத்தான் இருக்கிறது. எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக மக்களின் உரிமைகளுக்காக போராடி கொண்டே இருக்கிறார். எங்கள் கட்சி எழுச்சியாகத்தான் இருக்கிறது.
எங்கள் எழுச்சியை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும், எங்கள் சாதனைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும், நாங்கள் இருக்கிறோம், பயப்படாதீர்கள், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் நல்லாட்சி தருவோம் என மக்களுக்கு சொல்வதற்காக இந்த மாநாட்டை நடத்தி வருகிறோம்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை விட பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள், மக்களுடன் எழுச்சியாக இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொண்டர்களுடைய எழுச்சிக்காகவும் மக்களுடைய நம்பிக்கைக்காகவும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதற்கு இந்த மாநாடு ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கும். இன்னும் நிறைய விஷயங்களை நாங்கள் செய்ய போகிறோம். விமர்சனம் செய்பவர்கள் ஆயிரம் சொல்வார்கள். எங்கள் தலைவரை பொருத்தமட்டில் எங்கள் கழக பொதுச் செயலாளரை பொருத்தமட்டில் எதிர்க்கட்சித் தலைவரை பொருத்தமட்டில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர்.
அவருக்கு மதுரை, சேலம், கோவை, திருப்பத்தூர் என்ற வித்தியாசம் கிடையாது. யார் என்ன சொன்னாலும் தைரியமாக மதுரையில் வந்து மாநாட்டை நடத்துகிறார். ஏனென்றால் அவர் மக்களுக்கு நல்லாட்சியை கொடுத்திருக்கிறார். மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையால்தான் வந்திருக்கிறார். இவ்வாறு விந்தியா தெரிவித்தார். மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறுவதால், ரிங் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications