4 காயங்கள்.. ஆனால் போலீசுக்கும் ராஜசேகர் இறப்புக்கும் சம்பந்தம் இல்ல- கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்!
சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணமடைந்தது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு விளக்கமளித்துள்ளார்.
விசாரணைக் கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக மருத்துவக்குழு அமைத்து உடற்கூறு ஆய்வு நடைபெற்ற நிலையில், இன்று முதற்கட்ட மருத்துவ அறிக்கை வெளியானது.
நாமக்கல் கே.கே.வீரப்பன் காலமானார்! சகலவிதமான பதவிகளையும் பார்த்தவர்! 2 கட்சிகளில் ஜொலித்தவர்!
ராஜசேகர் உடலில் 4 காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு விளக்கமளித்துள்ளார்.
விசாரணைக் கைதி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை கடந்த 11ஆம் தேதி இரவு திருவள்ளூரில் போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் அடுத்த நாள் உயிரிழந்தார். குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. ராஜசேகரின் உடல் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ராஜசேகர் மரணம்
விசாரணைக்கு அழைத்து வரும்போதே ராஜசேகரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ராஜசேகரை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும், இதையடுத்து அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் உயிரிழந்தது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் ராஜசேகரை அடித்தே கொன்று விட்டதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
போஸ்ட் மார்ட்டம்
இந்நிலையில் ராஜசேகர் உடற்கூராய்வின் முதற்கட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. ராஜசேகரின் உடலில் மொத்தம் 4 காயங்கள் இருப்பதாக பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உடலில் உள்ள காயங்களால் விசாரணை கைதி ராஜசேகர் இறக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதி திசுக்கள் மற்றும் வேதியியல் குறித்த ஆய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும் பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் காவல் ஆணையர்
இந்நிலையில், ராஜசேகர் மரணம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "விசாரணைக் கைதி ராஜசேகரின் உடலில் 4 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 காயங்களும் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு முன்பான காயங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. போலீசார் கைது செய்து 10 மணி நேரம் தான் ராஜசேகர் போலீசார் வசம் இருந்தார்.
போலீசார் தாக்கவில்லை
விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு மருத்துவ விசாரணை அறிக்கையே சாட்சி. ராஜசேகர் மீது காவல் சித்ரவதை நடைபெறவில்லை. ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறையினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.