"இருமொழிக் கொள்கை தான் என முதல்வர் விஜய் உறுதியாக தெரிவித்தார்".. இந்திய மாணவர் சங்கத்தினர் பேட்டி
சென்னை: இரு மொழிக் கொள்கைதான் தவெக அரசின் கொள்கை என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்ததாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். 29 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாகவும் மற்ற கோரிக்கைகளை துறை ரீதியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை இன்று தலைமைச் செயலகத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் திரு. தௌ.சம்சீர் அகமது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடி, கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் சம்சீர் அகமது மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா உள்ளிட்டோர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரை இன்று சந்தித்தோம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான 29 கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் தொடர்பாக கோரிக்கை வைத்தோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலையாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.
நாப்கின் இயந்திரங்களை பள்ளி, கல்லூரிகளில் வைப்பதற்கு கோரிக்கை வைத்து அதனையும் செய்து தருவதாக முதலமைச்சர் உறுதி கொடுத்தார். பள்ளிகளின் கட்டமைப்பை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனையும் முதலமைச்சர் செய்து தருவதாக கூறினார். ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பெண்களுக்கு வழப்படுகின்ற இலவச நாப்கின் வழங்க வேண்டும் மேலும் அதை பயன்படுத்திய நாப்கின் எரியூட்ட இயந்திரங்கள் வேண்டும் என தெரிவித்திருக்கிறோம்.
29 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாகவும் மற்ற கோரிக்கைகளை துறை ரீதியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இரு மொழி கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை என உறுதிபடக் கூறினார்" எனத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கொள்கை நிலைப்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "இருமொழிக் கொள்கை என்பது வெறும் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டுமானது அல்ல. அதுதான் த.வெ.க-வின் அதிகாரப்பூர்வக் கொள்கையும் கூட" என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்தார்.
தமிழகத்தின் நீண்டகால அரசியல் மற்றும் சமூக வரலாற்றோடு பிணைந்துள்ள இருமொழி கொள்கையை அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்பதை தவெக அரசு தொடர்ந்து முழுமையாக பின்பற்றும் என்பதை இதன் மூலம் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
மேலும், மத்திய அரசின் புதிய கல்வித் திட்டமான 'பிஎம் ஸ்ரீ பள்ளி' திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜ்மோகன், "மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் குறித்து எங்களது அரசு தரப்பில் ஆலோசித்து, அதன் சாதக பாதகங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications