திருமங்கலம் ஸ்டேஷனில் ’பார்க்கிங்’ பிரச்சினை இல்லை.. அசத்திய சென்னை மெட்ரோ.. பயணிகள் ஹேப்பி!
சென்னை: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்த நிலையில், கூடுதல் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் விதமாக பார்க்கிங் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேம்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகரின் மையத்தில் உள்ள பகுதிகளுக்கு கூட டிராபிக் சிக்னலில் மாட்டிக்கொள்ளாமல் எளிதாக பயணம் செய்ய முடியும். சொந்த வாகனங்கள் இருந்தாலும் கூட மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள்..

இதனால், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போது வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதிலும் சென்னையில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்க கூடிய திருமங்கலம் மெட்ரோ நிலையத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்ய போதிய இட வசதிகள் இல்லை என்ற ஆதங்கத்தை பயணிகள் முன்வைத்து வந்தனர்.
தற்போதுள்ள திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 1100 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும் அளவிற்கு மட்டுமே வசதி உள்ளது. திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தை நாள்தோறும் 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். இதனால், பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான், பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் கூடுதலாக 450 பைக்குகளை நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் பகுதி திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியை மேம்படுத்தியுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்தும் பகுதி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் அருகில் அமைந்துள்ளது. மேலும், இந்த வாகன நிறுத்தும் பகுதியில் 450 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 25 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தை பொறுத்தவரை சுரங்கப்பாதையில் உள்ள ரயில் நிலையமாகும். பச்சை வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை, சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். இதனால், பயணிகள் கூட்டம் எப்போதும் அதிக அளவில் காணப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.












Click it and Unblock the Notifications