பம்பர் குலுக்கல்..இன்றைக்கு ரொம்ப முக்கியம்..! ஆர்டிஇ மூலம் இலவச கல்வி..பெற்றோர்களே மறந்துறாதீங்க!
சென்னை: இன்று இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மூலம் கல்வி பெற தனியார் பள்ளிகளுக்கு விண்ணபித்த அனைத்து குழந்தைகளுக்கும் அந்தந்த பள்ளியில் குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே இதற்காக விண்ணப்பித்திருந்த பெற்றோர்கள் இன்று அந்தந்த பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.. போகும் போது என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் தெரியுமா?
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் ( ஆர்டிஇ) மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதி 2011ன் கீழ் கல்வி மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை மாநிலம் முழுவதும் 7200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 80 ஆயிரம் இடங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளியில் சேரும் குழந்தை எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம். அவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டிலிருந்து இந்த திட்டம் தமிழகத்தில் அமலில் இருக்கிறது இதுவரை 4.50 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்திருக்கிறார்கள்.
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை பெறப்பட்டன தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 80 ஆயிரம் இடங்களுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலமாக குழந்தைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தலைநகரான சென்னையில் மட்டும் 636 தனியார் பள்ளிகளில் குலுக்கல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஇ-க்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதால் பெற்றோர் முன் குலுக்கல் நடைபெறுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி சென்னையில் மட்டும் 8000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று RTE - LKG மூலம் பதிவு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளியில் குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறும் நிலையில் பெற்றோர்கள் பள்ளிக்களுக்கு நேரில் செல்ல வேண்டும். பள்ளிக்கு செல்லும் போது * RTE - அப்ளிகேஷன், இருப்பிட சான்றிதழ் , சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை ஒரு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். குலுக்கல் நிறைவடைந்ததும் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் அதற்கு பிறகு கல்வியாண்டு தொடக்க நாளில் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications