சீட் ஷேரிங்.. ரெடியான அதிமுக கூட்டணி! வட தமிழ்நாட்டில் 1 எம்.பி சீட் .. குறி வைத்த ஜெகன் மூர்த்தி!
சென்னை: அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக சூசகமாக கூறியுள்ளார் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், கட்சிகளின் கூட்டணி விவகார பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. அதிமுகவை பொறுத்தவரை, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில், வலுவான கூட்டணியை கட்டமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. சீட் பகிர்வு பேச்சுகளும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி ஏற்கனவே அறிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன் மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சி சார்பில் வரும் 20 ஆம் தேதி மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தவுள்ளதாகவும், இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய பூவை ஜெகன் மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 2015 பெரு வெள்ளத்தை அதிமுக அரசு சிறப்பாக கையாண்டதாகவும், ஆனால் இப்போது இரண்டு நாள் மழைக்கே சென்னை தத்தளித்ததாகவும், மழை நீர் வடிகால் பணிகளுக்காக திமுக அரசு செலவிட்ட தொகை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அரசு அறிவித்த 6 ஆயிரம் நிவாரண தொகையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கீழ்வைத்தினன்குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெகன் மூர்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் வட தமிழகத்தில் ஒரு தொகுதியில் தனது கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஒருவரை களமிறக்க ஜெகன் மூர்த்தி திட்டமிட்டுள்ளது அவரது பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications