வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை ரத்து செய்த வழக்கு! சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக மேல்முறையீடு
சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க தமிழக அரசு கையகப்படுத்தியதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, இந்த தீர்ப்பை அளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் தவறுகள் நடந்துள்ளது என தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை. தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றத்தை நாடியதாக அதிமுக கூறுவதை ஏற்க முடியாது.
நடைமுறை தவறுகள் உள்ளதாலும் பொதுப் பயன்பாடு இல்லை என்றும் உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தப்பட்டு உள்ளதாலும் தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை என கூறி அதிமுகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்த நிலையில் அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications