அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது தண்டனையா? பரிசா? முதலமைச்சருக்கு அதிமுக கேள்வி!
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டிருப்பது தண்டனையா, பரிசா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூட துணிவில்லையா என முதல்வரை அதிமுக ஐடி விங் வினவியுள்ளது.
மேலும், நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள் என்ற கேள்வியையும் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி வைத்துள்ளது அதிமுக ஐ.டி.விங்.

அமைச்சர் பதவிகள்
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் பிடிஓ அளித்த புகாரால் அவரிடம் இருந்த வளம் கொழிக்கும் துறையான போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டு அது சிவசங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அமைச்சர் சிவசங்கர் வசம் இதுநாள் வரை இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனுக்கு மாற்றித் தரப்பட்டுள்ளது.

இலாகா மாற்றம்
அமைச்சர்களின் இந்த இலாகா மாற்றம் திமுக ஆட்சிப் பொறூப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாற்றம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கையால் மற்ற அமைச்சர்கள் சிலரும் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிபார்த்து பக்குவமாக நடந்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஐடி விங்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பும் வகையில் விமர்சனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டிருப்பது தண்டனையா, பரிசா என வினவப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

அதிமுக பதிவு
''அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பது தான் நீங்கள் வழங்கும் உச்சபட்ச தண்டனையா? இது தண்டனையா அல்லது பரிசா? ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்?'' இவ்வாறு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி டிவிட்டர் பக்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications