அள்ளு அள்ளு எதையும் விடாத.. சாக்குப்பையை கொண்டு வந்த தொண்டர்கள்.. அதோ கதியான அதிமுக நீர் மோர் பந்தல்
சென்னை: காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்றதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மோர் பந்தலில் வைக்கப்பட்டு இருந்த பழங்களை சாக்கு பைகளில் அள்ளி சென்றனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக மே மாதத்தில் வாட்டி வதைக்கும் வெப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் துவக்கத்தில் இருந்தே உக்கிரம் காட்டி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று விட்டு வருவதற்குள் வியர்வையில் ஒரு குளியல் போட்ட மாதிரி அளவுக்கு வெப்பம் வதைத்துக்கொண்டு இருக்கிறது. வரும் நாட்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் எப்படி சமாளிக்க போகிறோமோ என தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பொதுமக்களின் நலன் கருதி பொது இடங்களில் நீர் மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து உதவி செய்ய முன்வர வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்படி, பல்வேறு பகுதிகளிலும் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவின் முதல் நாள் என்பதால், கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திறந்து வைத்தனர். மாம்பழங்கள், ஆரஞ்சு பழங்கள், வாழைப்பழங்கள் என அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
கட்சி நிர்வாகிகள் திறந்து வைத்து விட்டு சென்றதும் அங்கு நின்ற தொண்டர்கள், உடனே மாம்பழங்களையும் ஆரஞ்சு பழங்களையும் அள்ளி சென்றனர். ஒரு சிலரோ. மொத்தமாக அள்ளி செல்ல கையோடு சாக்கு பைகளையும் கொண்டு வந்து இருந்ததுதான் ஹைலைட். பைகளில் வாரி இறைத்து போட்ட தொண்டர்கள் சிரித்த முகத்துடன் சென்றனர். மலைபோல குவிக்கப்பட்டு இருந்த பழங்கள் ஒரு சில நிமிடங்களில் மாயமானதை பார்த்து கட்சி நிர்வாகிகளும் அதிர்ந்து போயினர்.
முன்னதாக, கடந்த வாரம் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, நீர் மோர் பந்தலை திறந்து வைத்த போதும் இதேபோன்று கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மொத்தமாக அள்ளி சென்றதை பார்க்க முடிந்தது. அள்ளி சென்றால் என்ன.. வீணாகவில்லையே.. எளிய மக்களுக்குதானே பயன்படுகிறது என்றும் பொதுமக்கள் சிலர் பேசிக்கொண்டதை காண முடிந்தது.












Click it and Unblock the Notifications