அஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்
-கோயா
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் ஒரு வித்தியாசமான பிரச்சினையை சந்திக்கவுள்ளனர். அதாவது கட்சி மேலிடத்திலிருந்து அவர்களுக்கு செலவுக்கு இந்த முறை காசு தரப்படாது என்று சொல்லப்படுகிறது.
வேட்பாளராக அறிவிக்கப்படுகிறவர்கள் தேர்தல் செலவுகளை அவர்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இதனால் விருப்ப மனு போட்டுள்ளவர்கள் ஆஹா.. முதலுக்கே மோசமாகி விடும் போலயே என்று கவலையில் ஆழ்ந்துள்ளனராம்.
வழக்கமாக கட்சி மேலிடத்தில் பணம் கொட்டிக் கிடக்கும் (இப்போதும் இல்லை என்று சொல்ல முடியாது). இதனால் வேட்பாளர்கள் செலவு செய்வது போக கட்சியிலிருந்தும் கணிசமாக போகும். ஆனால் ஜெயலிலாதா மறைவுக்குப் பிறகு தலைகீழாகி விட்டதாம் எல்லாமே.

வரவு செலவு
அதிமுகவில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் செலவு குறித்து ஓ.பி.எஸ்.சும்- இ.பி.எஸ்.சும் விவாதித்தார்களாம்.

வரவே இல்லை
ஜெயலலிதா இருந்த காலத்தில் கட்சி வளர்ச்சி நிதி மாத மாதம் ஆட்டோமெட்டிக்காக வந்து குவியும். ஆனால் எடப்பாடி முதல்வரானது முதல் கட்சி வளர்ச்சி நிதி வசூலிக்கப்படவில்லை, யாரும் அதை கொடுக்கவும் முன்வரவில்லை.

அவரவர் பணம் அவருக்கே
கட்சி மூலம் ஈட்டிய பணம் அவர் அவருக்கே சொந்தம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் செலவை என்னால் ஏற்க முடியாது எனக் கறாராக கூறிவிட்ட எடப்பாடி, விருப்பமனு அளித்துள்ள முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகளுக்கோ, உறவினர்களுக்கோ சீட் கொடுத்துவிட்டால் அவர்களே தேர்தல் செலவுகளை கவனித்துக்கொள்வார்கள் எனக் கருதுகிறாராம்.

சீட்
அதன்படி முக்கிய தொகுதிகளில் முக்கியஸ்தர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுத்து பிரச்சினையை சரி செய்யும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் விருப்ப மனு செய்துள்ள வேட்பாளர்களிடையே ஆஹா.. என்ற மலைப்பு இப்போதே வந்து விட்டதாம்.












Click it and Unblock the Notifications