அடுத்தக்கட்ட நடவடிக்கை! சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தீவிர ஆலோசனை.. மாஜிக்கள் பங்கேற்பு!
சென்னை: ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி மாஜி அமைச்சர்களுடன் இன்று மாலை தனது வீட்டில் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கிய நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை ஏற்பட்டது.
ஓ பன்னீர் செல்வத்தின் அனுமதியின்றி ஜூன் 23 மற்றும் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டப்பபட்டது. இதில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பூ பாதையா..? சிங்கப்பாதையா..? எடப்பாடி முன் இருக்கும் இரண்டே இரண்டு வாய்ப்புகள் - விரைவில் டாஸ்
நீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கட்சியின் விதிமுறைகள் படி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. இதனால் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது எனக்கூறி ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவை எதிர்க்கும் ஓ பன்னீர் செல்வம், வைரமுத்து ஆகியோரின் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2 வாரத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டிய நிலை இருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்கள் செய்தனர். இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு இன்று வெளியானது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை தீர்ப்பு வழங்கினார்.
பொதுக்குழு கூட்டம் செல்லாது
அதன்படி அதிமுகவில் ஜூலை 11ல் கூடிய பொதுக்குழு செல்லாது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் சேர்ந்து கூட்ட வேண்டும். இதனால் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தொடரும் ஆலோசனை
இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் தேர்வு செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்த தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக மாறியுள்ள நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பழனிச்சாமிக்கு கடும் பின்னடைவாக மாறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தியதால் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மீண்டும் மாஜிக்களுடன்
இதன் தொடர்ச்சியாக மாலையில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி மாஜி அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீர்ப்புக்கு முன்பும் ஆலோசனை
இதற்கு முன்பு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என்ற தகவல் வெளியானவுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் காலையில் ஆலோசனை நடத்தினர். ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் எடப்பாடி பழனிச்சாமியும் தனது ஆதரவாளர்களுடன் காலையில் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே தான் உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.