Exclusive: மதியத்தில் தூங்கமாட்டேன்! வாரத்தில் 4 நாட்கள் மீன் சாப்பாடு! மனம் திறக்கும் ஜெயக்குமார்!
சென்னை: அமைச்சராக இருந்த போது நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஜெயக்குமார், இப்போது தனது பொழுதை எப்படி கழிக்கிறார் என்பதை அறிவதற்காக நாம் அவரிடம் பேசினோம்.
அப்போது தனது நேரம் எவ்வாறு செலவாகிறது என்பது குறித்து மனம் திறந்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அதன் விவரம் பின்வருமாறு;
ஓமிக்ரான் பற்றி பொதுமக்கள் பயப்பட வேண்டாம்...29 பேர் குணமடைந்தனர் - மா.சுப்ரமணியன்
45 நிமிடம் உடற்பயிற்சி
''காலையில் தினமும் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். அதற்கு பிறகு அரைமணி நேரத்துக்கும் குறையாமல் நாளிதழ்கள் படிப்பேன். நான் அப்டேட்டாக இருக்க வேண்டும் என நினைப்பவன், அதனால் நியூஸ் பார்ப்பதையும், பேப்பர் படிப்பதையும் தவிர்க்கமாட்டேன். என்னை பார்க்க யாராவது வந்திருந்தால் அவர்களை பார்ப்பேன், மாவட்ட கட்சிப் பணிகள் இருந்தால் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று அதை கவனிப்பேன்.''
4 நாட்கள் மீன்
''வாரத்தில் 4 நாட்கள் எனது வீட்டில் மீன் சாப்பாடு தான். மீன் ஆரோக்கியமான உணவு என்பதால் அதை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்வேன். மீதமிருக்கும் 3 நாட்களில் ஒரு நாள் மட்டன் அல்லது சிக்கன் இருக்கும். 2 நாட்கள் வெஜ்டேரியன் உணவு செய்வார்கள். அதேபோல் மதியத்தில் எனக்கு தூங்கும் பழக்கம் இல்லை. எப்போதாவது தான் சிறிது நேரம் தூங்குவேன். மற்றபடி யூ டியூப்பில் எனக்கு பிடித்த அந்தக்காலத்து பாடல்களை அரைமணி நேரமாவது கேட்டு ரசிப்பேன்.''
பேரக்குழந்தைகள்
''எனக்கு புதுப்படமோ புதுப்பாடல்களோ பிடிக்காது. இப்போது வரும் படங்களில் ஒரு யதார்த்தம் இல்லை என்பதால் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கமாட்டேன். பள்ளி முடிந்து வரும் பேரக்குழந்தைகளோடு விளையாடுவேன். இது மனதுக்கு புத்துணர்வை தரும். அதேபோல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நியூஸ் பார்க்கும் பழக்கம் உள்ளவன் நான். மீண்டும் மாலையில் கட்சியினர் சந்திக்க வந்தால் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பேன். அப்படியே நிர்வாகிகள் இல்ல நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளவும் செல்வேன்.''
அதே பரபரப்பு
''அமைச்சராக இருந்த போது எப்படி பரபரப்புடன் இருந்தேனோ, அதேபோல் தான் இப்போதும் இருக்கிறேன். வீட்டில் சும்மா இருக்கிறேன் என எண்ணிவிட வேண்டாம். இப்போது தான் எதிர்க்கட்சியாக எனக்கு அதிகப் பணிகள் இருக்கின்றன. இரவில் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளதால் தினமும் சிறிது நேரம் புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவேன். படிக்காமல் எதையும் பேச முடியாது, இதனால் புத்தகம் வாசிப்பது, பேப்பர் படிப்பது, நியூஸ் பார்ப்பது இந்த மூன்றையும் தினமும் நான் கடைபிடித்து வருகிறேன்''