மொதல்ல வாய்க்காலை தாண்டட்டும். அப்புறம் கடல் தாண்ட ஆசைப்படலாம்.. தினகரனுக்கு ஈபிஎஸ் டீம் பதிலடி!
வாய்க்காலை தாண்ட வக்கில்லாதவர்கள் எங்களை பற்றி பேசக்கூடாது என தினகரனுக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : இரட்டை இலை கிடைத்தால் மட்டும் வெற்றி பெற்று விடுவார்களா என்று விமர்சித்த டிடிவி தினகரனுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். வாய்க்காலை தாண்ட வக்கில்லாதவர்கள் எங்களை பற்றி பேசக்கூடாது என தினகரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜெயக்குமார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது அமமுக. இதைத்தொடர்ந்து திமுக, அதிமுக யாருக்கும் ஆதரவில்லை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது எங்கள் தொண்டர்களுக்குத் தெரியும் என டிடிவி தினகரன் கூறினார்.
மேலும், இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெறாது என தினகரன் விமர்சித்தார்.

இரட்டை இலை இருந்தால் மட்டும்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டிலியிருந்து விலகுவதாக அறிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் வென்றுவிடுவார்களா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை. இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் உள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெறாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

வாய்க்காலை தாண்ட வக்கில்லாதவர்கள்
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால் மட்டும் அதிமுக வெற்றி பெற முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "டி.டி.வி.தினகரன் முதலில் வாய்க்காலை தாண்ட வேண்டும். அப்புறம் கடலை தாண்ட ஆசைப்பட வேண்டும். வாய்க்காலை தாண்ட வக்கில்லாதவர்கள் எங்களை பற்றி பேசக்கூடாது" என பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெயக்குமார் பேட்டி
திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுக ஆட்சியில் கஞ்சா கடத்தல், அடாவடித்தனம், அராஜகம், அட்டூழியம் என சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளும் தலைவிரித்தாடுகிறது. திமுக கூட்டங்களுக்கு 2 அல்லது 3 லட்சம் ரூபாய் செலவழிகிறது என்றால், வணிகர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வசூலிக்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டினார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
மேலும் பேசிய ஜெயக்குமார், "கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை கொள்ளைகள் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன. இதனை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கொடுப்பதாக கூறியது இன்னும் வழங்கப்படவில்லை. கேஸ் மானியம் கொடுப்பதாக கூறி அதையும் வழங்கவில்லை. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. நகைக்கடன் ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

காவல்துறைக்கே பாதுகாப்பில்லை
திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக இருந்த தமிழ்நாடு போலீசார் இன்று கூனி குறுகி நிற்கிறார்கள். ஒரு துக்ளக் அரசு தமிழ்நாட்டை ஆண்டு வருகிறது. இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து கூறுவோம். இதனை மக்கள் உணர்வார்கள். நிச்சயமாக எங்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

நாங்கள் நம்புவது
எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எம்.ஜி.ஆரின் ஆசி, ஜெயலலிதாவின் ஆசி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். பண நாயகத்தைவிட ஜனநாயகம் வலிமையானது. அவர்கள் நம்புவது பண நாயகம், நாங்கள் நம்புவது ஜனநாயகம். எனவே கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications