மாணவர்களுக்கும் 1000 கொடுங்க.. என்ன பாவம் செஞ்சாங்க..? பாகுபாடு வேண்டாம்.. உதயகுமார் வைத்த கோரிக்கை!
சென்னை : அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி படிப்பைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுவதைப் போன்று மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, மாணவர்களுக்கு கொடுக்காமல் பாரபட்சம் காட்டக்கூடாது. இரண்டு பாலினத்தையும் பாகுபாடு இன்றி கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திமுக அமைச்சர்கள் மக்கள் பற்றி ஏளனமாகவும், எகத்தாளமாகவும் பேசுவதாகவும், ஆனால் இதுவரை முதலமைச்சர் மௌனம் விரதம் இருந்து வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார் ஆர்பி உதயகுமார்.
கம்பெனி இல்ல.. 'அரசியல்’.. 'மக்களின் நாடித்துடிப்பு தெரியலயே’ - பிடிஆரை சீண்டிய ஆர்பி உதயகுமார்!
ஆர்பி உதயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்.பி.உதயகுமார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடியார் திமுக அமைச்சர்கள் மக்கள் வேதனைப்படும் வகையில், அவர்கள் கண்ணீரை துடைப்பதற்கு பதிலாக, கண்ணீரை வரவழைக்கும் வார்த்தைகளை மக்களிடத்தில் பேசி வருகிறார்கள் என்று எடுத்துரைத்தார்.
அமைச்சர்களின் பேச்சு
குறிப்பாக அமைச்சர் பொன்முடி தாய்மார்களை கொச்சைப்படுத்தும் வகையில், ஓசி பயணம் என்று இழிவுபடுத்தும் வகையில் பேசியதை எடப்பாடியார் மக்களுக்கு சுட்டிக்காட்டினார். அதேபோல் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை பேச்சு என்ற பெயரில், மக்களை வேதனைப்படுத்தி உள்ளார். குறிப்பாக மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது, பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை கொடுக்க சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று நக்கலாக பேசியுள்ளார்.
5 அமைச்சர்கள்
அதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியுள்ளார், இதை முதலமைச்சர் இதுவரை கண்டிக்கவில்லை. அதேபோல் நிதி அமைச்சர் திட்டங்களைப் பற்றி கேட்டால் நாங்கள் என்ன தேதியா சொன்னோம் என்று எகத்தாளமாக பதில் கூறுகிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியல் இன மக்களை பேசிய சர்ச்சையில் தற்போது இலாகா மாற்றப்பட்டுள்ளது. திமுக 505 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை, ஆனால் மக்களை ஏளனத்துடன் பேசி வருகிறார்கள்.
பாகுபாடு கூடாது
மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, மாணவர்களுக்கு கொடுக்காமல் பாரபட்சம் காட்டக்கூடாது. இரண்டு பாலினத்தையும் பாகுபாடு இன்றி கொடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சைக்கிள் திட்டத்தை முதன் முதலில் ஆதிதிராவிடமக்களுக்கு கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து அனைத்து மாணவிகள் மாணவர்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்கினார்.
மாணவர்கள் என்ன பாவம் செஞ்சாங்க
தாலிக்கு தங்கம் திட்டம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஆண்களுக்கும் திருமண உதவித்தொகை திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆகவே விடியா திமுக அரசு ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக்கூடாது. மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
எகத்தாளமாக
திட்டங்களை கொடுத்து மக்களை வாழவைக்கத்தான் அதிகாரத்தை மக்கள் உங்களுக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் மக்களை நீங்கள் எகத்தாளமாக பேசுகிறீர்கள். இன்றைக்கு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் உள்ளார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக தலைமை செயலகத்திற்கு அமைச்சர்கள் செல்கிறார்களா? என்று தெரியவில்லை இதைத்தான் எடப்பாடியார் கூறியுள்ளார்.
கட்டுப்பாட்டு வளையத்தில்
தென் மாவட்டத்திற்கு எடப்பாடியார் வந்த பொழுது மக்கள் திரண்டு வரவேற்றனர். மீண்டும் எப்போது முதலமைச்சராக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தொடர்ந்து மக்களை அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதுவரை முதலமைச்சர் மௌனம் விரதம் இருந்து வருகிறார், ஆகவே முதலமைச்சர் கட்டுப்பாட்டு வளையத்தில் அமைச்சர்கள் உள்ளாரா என்று தெரியவில்லை" எனச் சாடியுள்ளார்.