அதிமுக மாஜிக்களுக்கு நெருக்கமான கரூர் அன்புநாதன் கைது! பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் அதிரடி
அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு நெருக்கமான கரூர் அன்புநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்த கரூர் அன்புநாதனை குற்றப்பிரிவு போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். ரூ. 6 கோடி பண மோசடி புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் என்று அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்த கரூர் அன்புநாதன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அன்புநாதன்
கரூரில் இருக்கும் முக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் அன்புநாதன். இவர் மாஜி அதிமுக அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமான நபராக அறியப்படுகிறார். இவரைத்தான் இப்போது குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 6 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் கரூர் அன்புநாதனை கைது செய்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இப்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ. 6 கோடி மோசடி
பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகக் கடை உரிமையாளர் அளித்த புகாரில் இப்போது கரூர் அன்புநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்த கடை உரிமையாளருடன் கூட்டுச் சேர்ந்து தொழில் செய்வதாகக் கூறி ரூ.6 கோடி வாங்கிய அன்புநாதன், அதன் பின்னர் தொழிலும் தொடங்காமல்.. வாங்கிய பணத்தைத் திருப்பியும் தராமல் ஏமாற்றியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் என்ன
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வந்துள்ளனர். இருப்பினும், கடந்த ஒரு வாரமாக அன்புநாதன் தலைமறைவாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கிய நிலையில், கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று அன்புநாதனை கைது செய்துள்ளனர்.

யார் இவர்
அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படும் அன்புநாதனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2016 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிரடி ரைடு நடத்தப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல அரவக்குறிச்சி தேர்தல் சமயத்திலும் இவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இது மட்டுமின்றி, இவர் மீது வெளிநாடுகளுக்குச் சட்ட விரோதமாகப் பணத்தைக் கொண்டு சென்றது தொடர்பாகவும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications