"கொங்கு லாபி".. முட்டி மோதிய 2 பேர்.. "அந்த" விஷயத்தில் திடீரென கைகோர்த்த இபிஎஸ்-ஓபிஎஸ்! ஆஹா அதிமுக
சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கும் நிலையில், அதிமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
நாட்டில் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் இருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி அடுத்து வரும் வாரங்களில் காலியாகிறது. இதற்கான தேர்தல் அறிவிப்பைச் சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
6 மாத மகப்பேறு விடுப்பு! சுகாதர ஊழியர்களுக்கு மேலும் பல சர்ப்ரைஸ்! அமைச்சர் மா.சுவின் மாஸ் அறிவிப்பு
அதன்படி புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுவும் நாளை மறுநாள் (மே 24) தொடங்கவுள்ளது.
மாநிலங்களவை
தமிழ்நாட்டில் திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோருக்கும் அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோருக்கும் பதவிக் காலம் முடிவடைகிறது. தற்போதுள்ள சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த 6 இடங்களில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு இரு இடங்களும் போகும்.
திமுக
கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்றும் மற்ற 3 இடங்களில் திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக சார்பில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவரைத் தவிரத் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், இரா.கிரிராஜன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் தேர்வு எளிதாக முடிந்துள்ள நிலையில், அதிமுகவில் வேட்பாளர் தேர்வு முடிந்தபாடில்லை.
அதிமுக
பாஜக மற்றும் பாமக கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. அதிமுகவுக்கு இரு எம்பி பதவிகள் கிடைக்கும் என்ற நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழக அரசைத் தொடர்ச்சியாகக் கடுமையாக விமர்சிக்கும் அதிமுக தலைவராக ஜெயக்குமார் உள்ளார். மேலும், திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்ட ஒரே நபர் ஜெயக்குமார் தான். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ஜெயக்குமார் ராஜ்யசபாவுக்கு செல்லும் வாய்ப்புகள் மிக அதிகம்.
கடும் போட்டி
அதேநேரம் மற்றொரு இடத்திற்குத் தான் கடும் போட்டி நிலவி வருகிறது. சமூக ரீதியில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு முக்குலத்தோர் ஒரு வன்னியருக்கு இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்குள் எழுந்துள்ளது. இதில் வன்னியர் கோட்டாவில் ராஜ்ய சபா செல்ல முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக முயன்று வருகிறார்.
கொங்கு லாபி
கொங்கு லாபியை பயன்படுத்தி, அதன் மூலம் ராஜ்ய சபா செல்ல ஐடி விங் மண்டலச் செயலாளர் கோவை சத்யனும் மிகத் தீவிரமாக முயன்று வருகிறார். அதேபோல முன்னாள் அமைச்சரும் அதிமுக சீனியர் தலைவர்களில் ஒருவருமான செம்மலை தன்னை ராஜ்ய சபாவுக்கு அனுப்புமாறு வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் இருந்து ஏற்கனவே பலருக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த முறை தென்தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. இவர்களைத் தவிர இன்பதுரை பெயரும் பரிசீலனை செய்யப்படுகிறது.
காலதாமதம்
அதிமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்யக் கட்சியின் உயர் நிலை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் தேர்வு செய்யத் தீவிர ஆலோசனை நடைபெற்றது. வேட்பாளரை இறுதி செய்து அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தாலும், ஒ.பன்னீர்செல்வம் இறுதி முடிவை எடுப்பதில் தாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது. ராஜ்யசபா செல்பவர்கள் மூலம் டெல்லியில் எடப்பாடியின் லாபி அதிகரித்து விடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக உள்ளார்.
அந்த விஷயத்தில் ஒற்றுமை
அதேநேரம் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வென்ற வைத்தியலிங்கம், கேபி முனுசாமி தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், திமுக தரப்பிற்குக் கூடுதலாக இரு எம்பி இடங்கள் கிடைத்தது. இதுபோல வரும் காலத்தில் மீண்டும் நடக்கக் கூடாது என்பதில் ஈபிஎஸ்-ஒபிஎஸ் என இருவருமே தெளிவாக உள்ளனர். எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.