இதான் வேலுமணி.. டக்குன்னு ஸ்பாட்டுக்கு வந்து.. பாஜக செய்த தவறை.. சமாளித்து மேட்ச் செய்த அமைச்சர்!
பாஜக செய்த செயலால், எஸ்பி வேலுமணி வியாபாரிகளுக்கு ஆறுதல் சொன்னார்
சென்னை: கோவையில் வியாபார பெருமக்களை சந்தித்து ஆறுதல்களை தெரிவித்ததுடன், அமைதியான தமிழகத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.. இவருக்கு ஆதரவு திரட்ட, ராதாரவி, நமீதா மட்டுமல்லாமல், வடமாநிலங்களில் இருந்து தலைவர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், உபி முதல்வர் யோகியும் நேற்று முன்தினம் வந்தார்.. வந்த முதல்நாளிலேயே, அதுவும் கொஞ்ச நேரத்திலேயே கலவரம் வெடித்தது.. பைக் ஊர்வலம் போகும்போது, அங்கே கடையை சில வியாபாரிகள் திறந்து வைத்திருந்திருக்கிறார்கள்.. அந்த கடைகளை மூட சொல்லி பாஜகவினர் தகராறு செய்திருக்கிறார்கள்..கடைகள் மீது கல்லெறிந்துள்ளனர்.. இதனால் ஊர்வலத்தில் குழப்பங்களும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

வேலுமணி
இந்த செய்தியை அறிந்ததும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி உடனடியாக சம்பவம் நடந்த இடமான கோவை பெரியகடை வீதிக்கு வந்தார்.. அங்குள்ள வியாபார பெருமக்களையும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், தமிழகத்தை பொறுத்தவரை எந்தவிதமான ஜாதி, மத, பிரச்சனைகளுக்கும் அம்மாவின் ஆட்சியில் ஒரு துளியும் இடமளிக்க முடியாது என்றார்.

சகோதரத்துவம்
அதுமட்டுமல்ல, குறிப்பாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அனைவரும் சகோதரத்துவத்துடன் பாதுகாப்பாக வாழ்வதற்கு அதிமுக எப்பவுமே உறுதுணையாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் கோவை மாவட்டத்தில் ஒரு போதும் நடைபெற அனுமதிக்க மாட்டோம். அமைதியான கோவைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோளையும் விடுத்தார்.

ஆறுதல்
அமைச்சர் வேலுமணி, வியாபாரிகளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு வந்திருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.. அமைச்சருக்கு சால்வை அணிவித்து தங்களது மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்... அதுமட்டுமல்ல, எஸ்பி வேலுமணியின் இந்த செயல்பாட்டால் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சூப்பர்
உண்மையை சொல்லப்போனால், கடந்த 6 மாதமாகவே தொகுதிக்குள் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார் வேலுமணி.. தன் தொகுதிக்கு முடிந்த அளவுக்கு ஏராளமான நன்மைகளையும், நலத்திட்டங்களையும் செய்து வந்துள்ளார்.. இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பை பெற, எவ்வளவோ முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.. ஆனால், ஒரே நாளில் பாஜகவின் செயலால், மொத்தமும் பாதிக்கப்பட இருந்தது.. நல்லவேளை, அமைச்சர் விரைந்து சென்று வியாபாரிகளுக்கு ஆறுதல் சொல்லி, நிலைமையை சரிக்கட்டியது, தேர்தலுக்கு இறுதிக்கட்ட நேரத்தில் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications