“புலி வாலை” பிடிச்சுட்டாரே அண்ணாமலை.. வரிந்து கட்டும் அதிமுகவினர்! திமிர்பேச்சு என எம்.எல்.ஏ கண்டனம்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி அவருக்கு அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமிர் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றேன். மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் துரோகிகளால் திட்டமிட்டு பழிவாங்கப் பட்டாரே தவிர, அரசியல் எதிரிகளால் போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கிவர் எங்களுடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள். வரலாறு தெரியாமல் உளறுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்." என்று பதிவிட்டு உள்ளார்.

அண்ணாமலை இத்தகைய எதிர்ப்பை சந்திப்பதற்கு காரணம் தனியார் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டிதான். "தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கட்சிகள் ஊழலில் ஈடுபட்டன. மக்களின் பணத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட எல்லா கட்சிகளையும் சொல்கிறேன். அனைத்து கட்சிக்கும் இது பொருந்தும். இங்கு நடைபெற்ற எல்லாமே ஊழல் ஆட்சிகள்தான். ஊழல் செய்ததால் முன்னாள் முதலமைச்சரே தண்டிக்கப்பட்டு உள்ளார்." என்று தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவையே விமர்சித்து பேசியதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதில், "டெல்லியில் சமரச பேச்சு நடக்கவில்லை. டெல்லிக்கு எங்களின் கண்டன குரல் கேட்கும். அண்ணாமலைஅதிமுக கூட்டணி வேண்டாமென நினைக்கிறார். அண்ணாமலை கட்டுச் சோறில் உள்ள எலியைபோல் செயல்படுகிறார்.
அதிமுக கூட்டணியில் அண்ணாமலை வில்லங்கம் செய்ய நினைக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற 40% கமிஷன் பற்றி ஏன் அண்ணாமலை பேசவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் அண்ணாமலை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

அதில், "அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இந்தப் பேச்சு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் திரு. அண்ணாமலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications