கனிமொழி பற்றி பேசியது ஏன்? ஆட்டோவில் வந்த நவனீதகிருஷ்ணன்.. திடீரென இபிஎஸ் - ஓபிஎஸ்சை சந்திக்க பிளான்
சென்னை: அதிமுக எம்பி நவனீதகிருஷ்ணன் இன்று அதிமுக தலைமையகத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார்.
அதிமுகவின் ராஜ்ய சபா எம்பி நவநீதகிருஷ்ணன். இவர் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக கூட்டத்திற்கு பின்பாக எம்பி நவநீதகிருஷ்ணன் கட்சி பதவி பறிக்கப்பட்டது.

கனிமொழி
கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்கள் குறித்து இவர் புகழ்ந்து பேசியதுதான் இந்த நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் மகள் திருமண விழாவில் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். இதில்தான் நவநீதகிருஷ்ணன் திமுக எம்பிக்களை புகழந்து பேசினார். முக்கியமாக திமுக எம்பி கனிமொழியை புகழ்ந்து பேசினார்.

நவநீதகிருஷ்ணன்
அதில் ராஜ்யசபாவில் திமுக எம்பிக்கள் சிறப்பாக செயலாற்றுகிறார்கள். அவர்கள் முக்கியமான விஷயங்களை அவையில் பேசுகிறார்கள். நான் முதலில் ராஜ்யசபா சென்ற போது எனக்கு பல விஷயங்கள் தெரியாமல் இருந்தது. ஆனால் அதை எல்லாம் கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுக எம்பிக்கள்தான் எனக்கு கற்றுக் கொடுத்தனர். எப்படி அவையில் பேச வேண்டும் என்று அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்தனர்.

அதிமுக நவநீதகிருஷ்ணன் மீட்டிங்
திமுக எம்பிக்களை நவநீதகிருஷ்ணன் இப்படி புகழ்ந்து பேசியது இணையம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினர் மத்தியில் இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை இரண்டு நாட்களுக்கு அறிவித்தது. திமுக எம்பிக்களை பாராட்டிய நிலையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆட்டோவில் வந்தார்
இந்த நிலையில் எம்பி நவனீதகிருஷ்ணன் இன்று அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார். அதிமுக தலைமையகத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் நவனீதகிருஷ்ணன் தனிப்பட்ட விளக்கத்தை அளிக்கவுள்ளார். ஆட்டோவில் அலுவலகத்திற்கு இன்று காலை நவநீதகிருஷ்ணன் வந்தார்.

பேட்டி
மிக எளிமையாக ஆட்டோவில் வந்தவர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை சந்திக்க உள்ளார். சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்த நவனீதகிருஷ்ணன், கட்சி தலைமை என் மீது எடுத்த முடிவிற்கு நான் கட்டுப்படுகிறேன். கனிமொழி பற்றி நான் அப்படி பாராட்டி பேசியதில் தவறு இல்லை. என்னை பொறுத்தவரை கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று நவனீதகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications