திமுகவுக்கு அதிமுக செக்.. இஸ்லாமிய சிறைவாசிகளை ரிலீஸ் பண்ணுங்க! சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை: இன்று தொடங்க உள்ள தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி அதிமுக தீர்மானம் கொண்டு வர உள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. 58 பேர் பலியாக காரணமான இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் கைதான அல் உம்மா அமைப்பை சேர்ந்த பாட்சா உள்ளிட்ட மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைதாகினர். இவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த வழக்கு அல்லாமல் மேலும் பல வழக்குகளில் கைதான இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளை கடந்தும் சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களில் பலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறையிலேயே உயிரிழந்தனர். ஆயுள் தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் இருந்து வரும் இவர்களை விடுவிக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்கள் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மமக, எஸ்டிபிஐ, மஜக உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் இதனை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர். தலைமை செயலகம் நோக்கி பேரணியும் சென்றனர். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று இவர்களை விடுவிப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் ஆணையத்தை அமைத்தார்.
அந்த ஆணையத்தின் அறிக்கை தனக்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலினே ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார். ஆளுநரின் ஒப்புதலுக்காக அது அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சிறைவாசிகளை விடுதலை செய்யாததால் அரசு மெத்தனம் காட்டுவதாக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக இந்த பிரச்சனையை கையில் எடுத்து உள்ளது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அக்கட்சி, இஸ்லாமியர்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்க இன்று கூட இருக்கும் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர உள்ளது. பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ள 36 இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க அதிமுக கோரிக்கை வைக்க உள்ளது.
இதற்கு முன்பாகவே மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கோவை இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு முஸ்லிம்களின் பிரதான கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியது அதிமுக.












Click it and Unblock the Notifications