அண்ணா வழியில் அமைதியாக வெற்றி விழா நடைபெறட்டும் - அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
அண்ணா வழியில் அமைதியாக வெற்றி விழா நடைபெறட்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிறன்று நடைபெற உள்ள நிலையில் அண்ணா வழியில் அமைதியாக வெற்றி விழா நடைபெறட்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். எம்ஜிஆர் வழியில் விழிப்புடனும், ஜெயலலிதா வழியில் ஆற்றலுடனும் பணிகள் நடைபெறட்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஞாயிறன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைப்போம் என்று அதிமுக நம்பிக்கையுடன் கூறி வருகிறது. ஆட்சியை பிடித்து அரியணை ஏறுவோம் என்று திமுக நம்பிக்கையுடன் கூறி வருகிறது. கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் வெற்றிக்கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக அறிக்கை
இந்த நிலையில் அண்ணா வழியில் அமைதியாக வெற்றி விழா நடைபெற வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஜெ. வழியில் ஆற்றல்
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளும் கழகத்தின் மீது பேரன்பு கொண்ட நல்லோரும் 2ஆம் தேதியன்று சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்திலும் பேரறிஞர் அண்ணா வழியில் அமைதியுடனும் எம்ஜிஆர் வழியில் விழிப்புடனும் அம்மா வழியில் ஆற்றலுடனும் நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

பாதுகாப்பு அவசியம்
கொரோனா பெருந்தொற்று விரைந்து பரவி வரும் சூழலில் அனைவரும் பத்திரமாகவும் பாதுகாப்புடனும் செயல்படுவது இன்றியமையாததாகும். அது கழகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையும் ஆகும் என்பதை மறவாதீர்கள்.

தொண்டர்கள் பின்பற்றுங்கள்
வாக்கு எண்ணிக்கையின் போதும் வாக்கு முடிவுகள் வெளியாகும் வேளையிலும் அரசியல் கட்சியினரும் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

நெறி தவற வேண்டாம்
கண்ணியத்திற்கும் கட்டுப்பாடுகளுக்கும் கடமை உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் அதிமுக தொண்டர்கள் ஒவ்வொரு நொடியும் நெறிகளை தவறிவிடக்கூடாது. வாக்கு எண்ணும் இடங்களுக்கு யார் யார் செல்ல வேண்டும், வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் எத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறை
நாளைய நாள் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாள் ஆகையால் அதனை எப்படி முழுமையாக பின்பற்றவேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications