பொன் மாணிக்கவேல்: தமிழக அரசு தடை கேட்டால் என் கருத்தை கேட்க வேண்டும்.. யானை ராஜேந்திரன் கேவியட்
தமிழக அரசுக்கு எதிராக யானை ராஜேந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: பொன்மாணிக்கவேல் பணி நியமன உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், என் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை 2 நாட்களுக்கு முன்பு விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பு சொன்னார்கள்.
அதன்படி, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

புதிய ஆணை
அதோடு அன்றைய தினம் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில், மேலும் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரே நீடிப்பார் என்றும் புதிய ஆணை பிறப்பித்தது. மேலும் நியமன ஆணையை அரசு உடனே வெளியிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேல்முறையீடு
ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 30-ம் தேதியே ஓய்வு பெற்றவருக்கு ஐகோர்ட் எப்படி பணி நீட்டிப்பு செய்யலாம் என அரசு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

யானை ராஜேந்திரன்
எனவே ஐஜி.யின் பதவியை நீட்டிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்பதை மேல்முறையீட்டில் வலியுறுத்தப்பட உள்ளது. இந்நிலையில், வக்கீல் யானை ராஜேந்திரன், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கேவியட் மனு
அந்த மனுவில், "சென்னை ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், என் தரப்பு கருத்தை கேட்காமல், ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்க கூடாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications