சென்னை திருவான்மியூரில் நாளை திறக்கப்படும் பத்திரப்பதிவு அலுவலகம் சாதாரணமானது அல்ல.. சூப்பர் மேட்டர்
சென்னை: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னை திருவான்மியூரில் நவீன வசதிகளுடன் மாதிரி பத்திரப்பதிவு அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது. திருவான்மியூரில் திறக்கப்படும் புதிய அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதாக பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் பல்வேறு கவுண்ட்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நேரம் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்ய முடியும்.
இந்தியாவில் நகரமயமாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாவட்ட தலைநகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள் இடம் வாங்கவும், வீடு கட்டி குடியேறவும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாடு முழுக்க நகரப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் கிடுகிடுவென வளர்ந்து வருகிறது.

2010ல் தாம்பரத்தை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று அதன் மதிப்பு மிகப்பெரிய அளவில் மாறி இருக்கும். அதேபோல் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இடம் வாங்கி போட்டிருந்தால், அவர்கள் வேலைக்கே செல்லாமல் வாழ்நாள் முழுக்க சொகுசாக வாழ முடியும். அந்த அளவிற்கு நில மதிப்பு ஏறி உள்ளது. இதேபோல் கோவையில் எங்கு இடம் வாங்கி இருந்தாலும் மதிப்பு தாறுமாறாக உயர்ந்திருக்கும். சென்னை, கோவை மட்டுமல்ல எல்லா பகுதிகளிலும் இதுதான் நிலைமை.
அதேநேரம் சென்னையில் இடம் இல்லாத நிலையில் பழைய வீடுகள் எல்லாம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் எழுப்பப்படுகின்றன. 2010ல் அடுக்குமாடிகளை சென்னையில் எண்ணிவிடலாம். ஆனால் இன்று தனி வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவில் அடுக்குமாடிகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னைக்கு எங்கு காலியிடம் இருந்தாலும் அது அடுக்குமாடியாக மாறி வருகிறது. தமிழ்நாடு முழுக்க ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளருவதால் மாநிலத்தில் உள்ள 585 சார்பதிவாளர் அலுவலகங்களும் பிஸியாக செயல்படுகின்றன. இங்கு தினந்தோறும் சராசரியாக 15 ஆயிரம் பேர் வரை பத்திரங்கள் பதிவு, நகல் பெறுவது, வில்லங்க சான்றிதழ், திருமண பதிவு போன்ற சேவைகளை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முன்மாதிரி பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்க பத்திரப்பதிவுத்துறை திட்டமிட்டிருக்கிறது. அதற்காக அடையாறு சார்பதிவாளர் அலுவலகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது கோர்ட்டூர்புரத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலகம் திருவான்மியூர் காமராஜர் நகர், எல்.பி. ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய கட்டிடம் 3-வது மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த புதிய அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் எளிதாக பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் பல்வேறு கவுண்ட்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் மிக விரைவாக பத்திரப்பதிவு நடக்கும். இந்த புதிய மாதிரி பத்திரப்பதிவு அலுவலகத்தை நாளை (வியாழக்கிழமை) காலை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். எனவே நாளை முதல் அடையாறு சார்பதிவாளர் அலுவலகம் திருவான்மியூரில் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications