சர்ப்ரைஸ் கொடுத்த பாமக.. சிரித்த முகத்துடன் திருமாவளவன்! கையில் கவனிச்சீங்களா? அரசியல் நாகரீகம்
சென்னை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகாபலிபுரத்தில் வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை வன்னியர் சங்கத்தினரும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருமாவளவனுக்கு வன்னியர் சங்க அழைப்பிதழை பாமகவினர் கொடுத்த நிலையில் அதனை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதற்கு முன்னதாக வன்னியர் சங்கத்தை உருவாக்கி இருந்தார். அதற்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவினார். ஆனாலும் வன்னியர் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக ராமதாஸும் தலைவராக அன்புமணியும் உள்ளனர். தற்போது வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி மறைந்த நிலையில், தற்போது தலைவராக அருள்மொழி இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து மகாபலிபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டை நடத்துவது வழக்கம். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பாமகவினரும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் வன்னியர் சங்க மாநாடு நடந்த போது ஏற்பட்ட பிரச்சனையால் அடுத்து 12 ஆண்டுகள் அந்த மாநாடு நடைபெறவில்லை. இந்த நிலையில் மாநாடு நடத்த தீவிரம் காட்டி வருகிறது பாமகவும் வன்னியர் சங்கமும்.
வரும் மே மாதம் 11ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருமள மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான விழா குழு தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்தல்கால் ஊன்றப்பட்டு மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வன்னியர் சங்க மாநாட்டிற்கு திருமாவளவனை பாமகவினர் அழைத்த நிலையில் அவர்கள் வழங்கிய அழைப்புகளை சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்டார். மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் வந்து பங்கேற்க வேண்டும் என அக்கட்சியை நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், பாமகவினர் அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வன்னியர் சங்க மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் அவருக்கு சால்வை அணிவித்து அழைப்பிதழையும் கொடுத்துள்ளனர். திருமாவளவன் இன்முகத்தோடு அழைப்பிதழை பெற்றுக் கொண்டு மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததாக கூறினர். தொடர்ந்து அழைப்பிதழை கையில் வைத்துக் கொண்டு பாமகவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அரசியல் களத்தில் பாமகவும் விசிகவும் நேரெதிராக இருந்தாலும், இந்த அரசியல் நாகரீகத்தை பலரும் பாராட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications