வெல்லப் போவது யார்? 20 ஆண்டுகளுக்குப் பின் வேடசந்தூரில் அதிமுக- திமுக நேரடி மோதல்!
திண்டுக்கல்: வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக- திமுக நேரடியாக மோதுவால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் கடைசியாக 1996-ல் திமுக வென்றது. 2001 சட்டசபை தேர்தலில் திமுக போட்டியிட்டு தோல்வியை தழுவியது. அதன்பின்னர் 2006, 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி கொடுக்கப்பட்டது.
இதில் 2006-ல் மட்டும் காங்கிரஸ் வென்றது. கடந்த 2 முறையும் அதிமுக வெற்றி பெற்றது. இந்த தொகுதியை திமுகவுக்கு இம்முறை கொடுத்தாக வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

போராடிய காங்கிரஸ்
இதனை ஏற்று இந்த தேர்தலில் திமுகவுக்கு வேடசந்தூர் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கடைசிநிமிடம் வரை வேடசந்தூர் தொகுதி திமுகவுக்கா? காங்கிரஸ் கட்சிக்கா? என்ற நிலை இருந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாஜி எம்.எல்.ஏ. தண்டபாணி பகீரத பிரயத்தனம் செய்தார். சமூக ஆர்வலர் நம்பிக்காகவும் காங்கிரஸ் கட்சியில் ஒரு லாபி வேலை செய்து பார்த்தது. ஆனால் கடைசியில் திமுகவே வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

திமுக வேட்பாளர் காந்திராஜன்
வேடசந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மாஜி துணை சபாநாயகர் காந்திராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் காந்திராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் சட்டசபை தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தனர். அதற்கேற்ப வேடசந்தூர் தொகுதி வேட்பாளராக காந்திராஜன் அறிவிக்கப்பட்டார்.

திமுக கொண்டாட்டம்
வேடசந்தூர் திமுக வேட்பாளராக காந்திராஜன் அறிவிக்கப்பட்டதை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். காந்திராஜனை எதிர்த்து அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம் போட்டியிடுகிறார். டாக்டர் வி.பி.பி. பரமசிவத்தின் தந்தையும் காந்திராஜனும் துணை சபாநாயகராக பதவி வகித்தவர்கள். டாக்டர் வி.பி.பி. பரமசிவத்தின் தந்தை மறைந்த வி.பி. பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் துணை சபாநாயகராக இருந்தார். காந்திராஜன், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் துணை சபாநாயகராக இருந்தார்.

டாக்டர் வி.பி.பி. பரமசிவம்
டாக்டர் வி.பி.பி. பரமசிவம், காந்திராஜன் இருவரும் வேடசந்தூர் தொகுதியில் பெரும்பான்மையினரான ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்தவர்கள். இருவரும் உறவினர்கள். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக இந்த தொகுதியில் போட்டியிடுவதால் மிக கடுமையான போட்டி இருக்கும் என்பது களநிலவரம்.












Click it and Unblock the Notifications