நீண்ட நாள் கழித்து சென்னையில் கொரோனாவால் முதல் மரணம்.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
சென்னை: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் 23 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியின் சீனாவின் வூகான் மாநிலத்தில் இருந்து பரவ தொடங்கிய நிலையில்,அடுத்த 3 மாதங்களில் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பரவ தொடங்கியது.

அதன்பின்னர் தமிழ்நாட்டில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது. அதன்பின், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது. முதல் அலையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது அலை 2021 மார்ச் மாதம் முதல் ஆரம்பித்தது. மே மாதம் உச்சத்திற்கு வந்தது.
இரண்டாவது அலை கொரோனா பாதிப்பில் பலரும் கடுமையாக பாதிக்கப்பபட்டனர். ஏராளமானோர் இறந்து போனார்கள். சுடுகாடுகளில் பிணத்தை எரிக்க கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ்களில் பிணங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இரண்டாவது அலை ஜூலையில் குறையத்தொடங்கியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் செப்டம்பரில் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு 3வது அலை மீண்டும் 2022 தொடக்கத்தில் ஆரம்பித்தது. ஆனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
அதேநேரம் 2022 மத்தியிலேயே கொரோனாவிற்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக கொரோனாவை அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு இரண்டு வருடங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கேரளாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் நேற்று 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 16 பேர், கோவையில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications