மாணிக்கம் தாகூருக்கு ராகுல் தந்த பதவி.. மாஸ்டர்மைண்டே விஜய்தான்.. சத்தமின்றி சம்பவம் பண்ணிட்டாரு
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டதன் பின்னணியில் முதல்வர் விஜய்யின் ரோல் இருப்பதாக பரபர தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தமிழ் மாநில தலைவராக இருந்த செல்வப் பெருந்தகையை நீக்கிவிட்டு காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூரை நியமித்திருக்கிறார் ராகுல்காந்தி.
சட்டமன்ற தேர்தல் முடிந்ததுமே தலைவர் பதவியிலிருந்து செல்வப் பெருந்தகையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை காங்கிரசில் இருந்து வந்தது. அதற்கேற்ப செல்வப் பெருந்தகையை பற்றிய நிறைய புகார்களை மாணிக்கம் தாக்கூர், பிரவின் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவித்தபடி இருந்தனர். மாநில தலைவர் பதவியை பயன்படுத்தி திமுக அரசில் அவர் ' சாதித்த ' பல விஷயங்களையும் மேலிடத்தில் தோலுரித்துக் காட்டினர். தலைமையின் முடிவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு கூட்டணியை விட்டு வெளியேறாமல் காங்கிரசை நிலை நிறுத்திய பின்னணியில் விளையாடிய 'ஸ்வீட் பாக்ஸ் ' கள் குறித்தும் ராகுல் காந்திக்கு ரிப்போர்ட் கொடுக்கப் பட்டிருந்தது. இதெல்லாம் கணக்கில் கொண்டு தான், செல்வப் பெருந்தகையை பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தார் ராகுல்.

அதேசமயம், அவரை நீக்கிவிட்டு புதிய தலைவராக யாரை நியமிப்பது என்கிற ஆலோசனை நடந்தது. இதில் 5 நபர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அந்த நிலையில், தலைவர் பதவியைக் கைப்பற்ற தீவிர முயற்சியில் குதித்தார் மாணிக்கம் தாகூர். இதற்காக, தனது திமுகவின் எதிர்ப்பு நிலையையும், தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைய, தான் எடுத்த முயற்சிகளையும் பயன்படுத்தினார் தாகூர்.
ஆனால் இதனையறிந்த காங்கிரஸ் எம்.பி. க்கள், காங்கிரஸ் சீனியர் நிர்வாகிகள் என பலரும் மாணிக்கம் தாகூருக்கு எதிராக ராகுல் காந்தியிடம் பேசினார். அப்போது, இவருக்கு எதிராக இருக்கும் அத்தனை புகார்களையும் வரிசைப்படுத்தி முறையிட்டனார். தெலுங்கானா பொறுப்பாளராக மாணிக்கம் இருந்தபோது, கட்சி பதவிகள் விலை பேசி விற்கப்பட்டன என்கிற சர்ச்சைகள் எழுந்ததையடுத்து ராகுல் விசாரணை நடத்தினார். அது உண்மை தான் என அறிந்தார் ராகுல். அப்போது, 'இவர் மாணிக்க தாகூர் இல்லை, 'மணி'க்கம் தாகூர் ' என ராகுல் கமெண்ட் செய்திருந்தார். இதையெல்லாம் தங்களின் புகாரில் விவரித்து சொல்லியிருந்தனர்.
தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் மட்டுமல்லாமல், மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், கிறிஸ் சோடங்கர் உள்ளிட்ட பலரும் மாணிக்கம் தாகூரை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து, மாணிக்கத்தை நியமிக்க வேண்டாம் என்ற முடிவில் இருந்தார் ராகுல் காந்தி.
இந்த நிலையில், இதனையறிந்து அதிர்ச்சியடைந்த மாணிக்கம் தாகூர், முதல்வர் விஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் நெருக்கமான ராஜ்யசபா எம்பியும் தனது நண்பரான பிரவின் சக்கரவர்த்தியின் உதவியை நாடினார். இருவரும் ஆலோசித்திருக்கிறார்கள். இதனையடுத்து முதல்வர் விஜயிடம் பேசிய பிரவீன், காங்கிரசின் மாநில தலைவராக மாணிக்கம் தாகூரை நியமிக்க ராகுல்ஜியிடம் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அவர் கேட்பார். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அதிகம்.
மானிக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்களும் எம்பிக்களும் ராகுல்ஜியிடம் காய்களை நகர்த்துகின்றனர்" என்று சொல்லியிருக்கிறார். உடனே, ஓகே ஓகே என்று சொன்ன விஜய், ராகுல் காந்தியை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவரது சிபாரிசை தட்ட முடியாத ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர் நியமனத்தை டிக் அடித்தார். விஜய்யின் சிபாரிசை ஏற்றுக்கொள்ள ராகுலுக்கு சில காரணங்கள் உண்டு. விஜய்யின் உபயத்தால் தலைவர் பதவி இவருக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள் காங்கிரஸ் எம்பிக்கள்!
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications