"கோ பேக் மோடி.." பிரதமருக்கு எதிராக கறுப்பு பலூன்களுடன் வீடியோ.. காங். நிர்வாகிக்கு வீட்டு காவல்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்னை வரவுள்ள நிலையில், கறுப்பு பலூன்களுடன் வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் நிர்வாகி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி சனிக்கிழமை தமிழ்நாடு வர உள்ளார். சென்னை- கோவை வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அத்துடன் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
ஆந்திராவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மதியம் 3 மணியளவில் தமிழ்நாடு வருகிறார். முதலில் சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.

வந்தே பாரத்: அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல்- கோவை வந்தே பாரத், தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயிலைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு மெரினாவிற்குப் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுக்க பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் ரோந்து பயணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் சனிக்கிழமை பிளாட்பார்ம் டிக்கெட் விற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் முன்கூட்டியே வரவும் ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
போலீஸ் நடவடிக்கை: இதற்கிடையே பிரதமர் மோடி வருகையின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் கறுப்புக்கொடி காட்ட காங். நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே சென்னை காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன்குமார், Go back Modi என்ற பலூனுடன் ரஞ்சன்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமாரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஞ்சன்குமார் வைத்திருந்த கோ பேக் மோடி என்ற வாசங்கள் உடனான பலூன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக அக்கட்சியின் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, "அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் பதவியை இழக்கச் செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தைச் சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையைக் கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications