தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா.. சென்னை, கோவையில் மெல்ல பரவும் வைரஸ் பாதிப்பு.. மக்களே கவனம்
சென்னை: கடந்த 2019இல் தொடங்கிய சில ஆண்டுகள் நம்மை படுத்தி எடுத்து வந்த கொரோனா சில காலமாக அமைதியாக இருந்தது. எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இதற்கிடையே இப்போது மழை சீசன் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பல நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகளைப் படுத்தியதை யாராலும் மறுக்கவே முடியாது. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா பாதிப்பில் இருந்து அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாடும் தப்பவில்லை.

கொரோனா தொடர்ந்து உருமாறிய நிலையில், அது அலை அலையாக உலக நாடுகளைத் தாக்கியது. இதனால் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. உயிரிழப்புகளும் புதிய உச்சம் தொட்டன.
கொரோனா: அந்த கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆகிவிட்டன. குறிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே வைரஸ் பாதிப்பு கணிசமாகக் குறைந்து கட்டுக்குள் வந்தன. இப்போது உலகம் மாஸ்குகளை துறந்து மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இதற்கிடையே அதிர்ச்சி தரும் வகையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, கோவை: இதற்கிடையே தமிழ்நாட்டில் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை நகரங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரு நகரங்களில் தலா 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் மாநிலத்தில் ஆறு பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
முன்பு ஏற்படும் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது ஏற்படும் கொரோனா பாதிப்புகள் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. கொரோனா வேக்சின் உள்ளிட்ட காரணங்களால் இப்போது கொரோனா பாதிப்பு மோசமான அளவுக்கு ஏற்படுவதில்லை. இதனால் நாம் பெரியளவில் அச்சமடையத் தேவையில்லை. இருந்தாலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
அறிகுறிகள்: காய்ச்சல் அல்லது குளிர், இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தசை அல்லது உடல் வலி, தலைவலி, சுவை அல்லது வாசனை இழப்பு, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கொரோனா பரவல் மீண்டும் ஏற்படுவதால் மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை ஹேண்ட்வாஷ் போட்டுக் கழுவ வேண்டும் அல்லது சானிடைசர் பயன்படுத்த வேண்டும். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிவதும் நம்மை கொரோனாவில் இருந்து நிச்சயம் காக்கும்.












Click it and Unblock the Notifications