வீட்டுக்கே வரும் ரேஷன்.. தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பை 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தளர்த்தியது தமிழ்நாடு அரசு. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை கடந்த ஆகஸ்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என சிறப்பு பிரிவினருக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக சிறப்பு கவனம் தேவைப்படும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகிக்கும் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று குடிமைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பை 70-ல் இருந்து 65 ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தின் வாயிலாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15, 81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42, 657 பயனாளர்களும், 91,9,069 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் என ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 21,70,455 பயனாளர்களுக்கும் அவர்களின் இல்லங்களிலேயே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பு 70 வயதில் இருந்து 65 வயதாக தளர்த்தப்பட்டுள்ளதால் இன்னும் கூடுதலான மக்கள் பயன்பெற உள்ளனர்.












Click it and Unblock the Notifications